நாம் சுவாசிக்கும் காற்றில் 90 சதவீதம் விஷமாக்கும்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு!
இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. கடந்த 2006 – 2015 இடைப்பட்ட ஆண்டுகளில் சுவாச நோய் உள்ளிட்ட காரணங்களால் 35,616 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இக்காற்று மாசுக்கு உலகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக கடந்த மே மாதம் உலகச் சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இந்த மரணங்கள் அதிக அளவில் நிகழ்வதாகவும் . டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு 80 பேர் காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு பலியாவதாக அண்மையில் அறிவியல் ஏடு ஒன்றில் அதிர்ச்சி சர்வே வெளியிடப்பட்டிருந்த நிலையில் உலக மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் மாசடைந்த காற்றையே சுவாசித்து வாழ்கின்றனர். இதில், பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு மறுபடியும் கவலை தெரிவித்து உள்ளது.
நம்மில் பலரும் வீதிகளில் நடந்து செல்லும்போது தூசியும் வாகனப் புகையும் தொழிற்சாலை மாசும் கலந்த காற்றைச் சுவாசிக்கும்போது, அனிச்சையாக முகத்தை மூடிக்கொள்கிறோம். நல்ல காற்றைக்கூடச் சுவாசிக்க முடியாத சூழலை நினைத்து அலுப்பு ஏற்படுகிறது. வெளியிடங்களில் தான் சுகாதாரமற்ற காற்றைச் சுவாசிக்கிறோமா சிலவேளைகளில் நமது வாழ்விடங்களில் உள்ள காற்றுகூட சுகாதாரமற்றதாக உள்ளது என்பதை அறிகிறோமா? இன்னும் சொல்லப்போனால் வெளியே செல்லும்போது நாம் சுவாசிக்கும் நச்சுக் காற்றைவிட அதிகமாக வீட்டுக்குள்ளே நச்சுக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்பது நம்மை அதிர்ச்சியூட்டும் செய்திதான்.
ஆனால் அது தான் உண்மை. கட்டிடங்களின் உள்ளே சுழலும் மாசுபாடான காற்றால் நேரிடும் உயிரிழப்பு, வெளியே உள்ள காற்றின் மாசுபாட்டால் நேரிடும் உயிரிழப்பைவிட 14 மடங்கு அதிகம் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியம். இந்தப் பிரச்சினையை நாம் எப்படிச் சமாளிப்பது?
நம்மைப் பொறுத்தவரை நாம் மிகவும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபடி பாதுகாப்பான அறையில் இருக்கிறோம் எனத் தான் நினைக்கிறோம். ஆனால் உண்மையான சூழல் என்ன? அதைக் குறித்துக் கவனித்திருக்கிறோமா? நீங்கள் ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கே போதுமான வெண்டிலேஷன் உள்ளதா என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? நாம் வெளியிடும் சூடான காற்றை வெளியேற்ற போதுமான வசதி இருக்கிறதா என்று பார்த்திருக்கிறீர்களா? நாம் காற்றைச் சுவாசிக்கிறோம். அதிலுள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன் டை ஆக்ஸைடு கலந்த காற்றை வெளியிடு கிறோம். அந்தக் காற்றை முறையாக வெளியேற்றவில்லை எனில் அது அறையினுள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இது நமது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
இதனிடையே உலகின் 103 நாடுகளின் 3000 நகரங்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் உலக சுகாதார அமைப்பு ஒரு கருத்தாய்வு நடத்தி விரிவான புள்ளிவிவர அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் நாடுகளைப் பற்றிய தகவல்கள், வேதிப்பொருள் பரிவர்த்தனை, நில அளவை ஆகியவற்றைக் கொண்டு துணைக்கோளம் மூலம் மிகத் துல்லியமான தகவல்களைச் சேகரித்து உள்ளது.சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த பத்திரிகையாளர்கள் உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரிவின் தலைவரான மரியா நீரா சுட்டிக்காட்டினார்.
”மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். அதில் 90 சதவீதம் மரணங்கள் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் நிகழ்வதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. உலகில் ஆண்டுதோறும் காற்றுத்தூய்மைக்கேட்டால் மரணமடைவோரின் எண்ணிக்கையை 70 லட்சத்தில் இருந்து குறைக்கபட்டு உள்ளது
உலக மக்கள் தொகையில் 92 சதவீதம் பேர், உலக சுகாதார அமைப்பால் அனுமதிக்கப்பட்ட 2.5 மைக்ரோ மீட்டருக்கும் அதிகமான மாசுகலந்த காற்றையே சுவாசித்து வருகின்றனர். பொது இடத்தில் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள காற்றுமாசைவிட, வீடுகளுக்குள் நிலக்கரி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்துவதால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு ஆசியாவின் சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளும் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.இந்த பாதிப்பை மக்களின் சுகாதாரம் சார்ந்த அவசர நிலையாக கருதி, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை பரிந்துரைத்து உள்ளது. அதனால், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த, உடனடி நடவடிக்கையை உலக நாடுகள் தொடங்க வேண்டியது அவசியத்தில் உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.