வாங்க கை கழுவலாம்! -குளோபல் ஹேண்ட் வாசிங் டே!
இன்னிக்கு ( 15.10.2013) உலக கை கழுவும் தினம் ( Global Hand Washing Day) . இந்த நாளை எதுக்கு கொண்டாடணும்? கை கழுவுவது அம்புட்டு முக்கியமா? அப்ப்டீன்னு யோசிக்கறவங்க தொடர்ந்து படிங்க.. சலிப்பா இருந்தா போய் ‘கை கழுவி’ போட்டு நெக்ஸ்ட் ரிப்போட்டிங்-கை படிக்கலாம்.
நமக்கு தேவையில்லாத எத்தனையோ விஷயங்களை ‘கை கழுவி யாச்சு’ என்கிற ஒற்றை வார்த்தையில் கேஷூவலா சொல்லி விடறோம் ஆனால், கை கழுவுவது என்பது அன்றாட ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான விஷயம் என்பதை பலரும் நினைத்துப் பார்க்க மறந்து விடுறாங்க. சாப்பாட்டுக்கு முன்பும் (பலருக்கு அதற்குக்கூட பொறுமை இருப்பதில்லை), சாப்பிட்ட பிறகும் மட்டுமே கை கழுவுவோர் நம்மில் பலர். 24 மணி நேரமும் நம் கைகளில் ஒட்டி உறவாடும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால், எத்தனை எத்தனை நோய்களை நாமே அழைத்துக் கொள்கிறோம் தெரியுமா? டிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பதே ஆரோக்கியத்தின் அடிப்படை. ஏதோ தண்ணீரில் கையை நனைத்தோமா, உதறினோமா என்று கழுவுவது கூடாது. அதற்கும் ஒரு முறை இருக்கிறது.
ஏன்னா.. உலகத்துலே 2 மில்லியனுக்கு அதிகமான குழந்தைகள் டயரியா போன்ற வயிற்றுப் போக்கு மற்றும் நுரையீரல் தொற்றுக்களால் இறக்கிறாங்களாம். முறையாக சோப்பை பயன்படுத்தி கைகள் கழுவுவதன் மூலம் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். இதன் முக்கியத்துவம் உணரப் பட்டதால்தான் PPPHW (PUBLIC-PRIVATE PARTNERSHIP FOR HAND WASHING என்ற அமைப்பு 2008 லேயிருந்து ஒரு இயக்கமாக மாறி கைகழுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு வகைகளில் மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு உருவாக்க முயற்சி பண்ணுது. அதில் ஒன்றே உலக கைகழுவும் தினம் கொண்டாடுதல்.
இந்த அமைப்பில், உலக வங்கி, யூனிசெப்,(United Nations International Children Emergency fund) மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல் படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று கை கழுவும் தினம் கொண்டாட முடிவு செய்யப் பட்டது
உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவை எடுத்து உண்பதற்கு கைகளே பயன்படுத்தப் படுது. சரியாகக் கழுவப் படாத கைகள் கிருமிகளின் தாயகமாக விளங்குகிறது. வயிற்றுப் போக்கு டைபாயிட் காலரா போன்ற தொற்றுக்களுக்கு ஆதாரமாக விளங்குவது மனித மலம். ஒரு கிராம் மனித மலத்தில் சுமார் 1கோடி வைரஸ்களும்,10 லட்சம் பாக்ட்டீரியாக்களும் வாசம் செய்து கொண்டிருக்குமாம். இவை பல்வேறு விதங்களில் மலத்திலிருந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பரவினாலும் எப்படியோ கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உண்ணும்போதோ விரல்களை வாயில் வைக்கும் போதோ ஜாலியாக உடலுக்குள் நுழைந்து தன வேலையை காட்டத் தொடங்குகிறது. அசுத்தமான தண்ணீர் வழியாகவும், ஈக்கள் மூலமாகவும் இந்த நுண்ணுயிரிகள் பரவும் என்றாலும். என்றாலும் குறிப்பிடத் தக்க அளவு கைகளுடன்தான் இந்தக் கிருமிகள் கை கோர்த்துக் கொள்கின்றன
அது சரி..எப்போதெல்லாம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்?
மலம் கழித்த பின்பு
சாப்பிடுவதற்கு முன்
சமைப்பதற்கு முன்
உணவுப் பொருட்களை தொடுவதற்கு முன்
உணவு பரிமாறுவதற்கு முன்
குழந்தைகள் மலம் கழித்த பின்அதை சுத்தம் செய்த பின்
வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும்
கழிப்பறைகளை சுத்தம் செய்தபின்
\மருத்துவமனை சென்று வந்த பின்
அசுத்தமான இடங்களில் கை வைத்த பின்
அப்படீன்னா எப்படிக் கழுவ வேண்டும் ?
வெறும் நீரால் நீண்ட நேரம் கை கழுவினாலும் கையில் உள்ள நுண்கிருமிகள் கையை விட்டு செல்வதில்லை.
விடாப் பிடியாக கண்ணுக்குத்தெரியாமல் ஒட்டிக கொண்டிருப்பவற்றை அகற்ற சோப்பை பயன்படுத்தி நன்றாக தேய்த்து கைகளை கழுவ வேண்டும்
நகங்கள் அழுக்கை சேமிக்கும் கிடங்காதலால் அதை அவ்வபோது வெட்டிவிட வேண்டும்.நகங்கள் இருந்தால் சோப்பு போடும் போது அங்கேயே கிருமிகளும் அழுக்கும் தங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு
கைகளை நீரினால் ஈரமாக்கிக் கொண்டு சோப்பு அல்லது சோப்பு கரைசலை தடவ வேண்டும்
உள்ளங்கைகளை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்
விரல்களை ஒன்றினுள் ஒன்றாக செலுத்தி நன்கு தேய்க்க வேண்டும்
வலது கை விரல் நுனிகளை இடது கை உள்ளங்கையிலும், இடது கை விரல் நுனிகளை வலது உள்ளங்கையிலும் வைத்து தேய்க்கவேண்டும்
கைகளில் சோப்பு நுரை குறைந்தது 30 வினாடிகளாவது இருக்க வேண்டும் .
பின்னர் கைகளை சோப்பு நுரை போகும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்
குழந்தைகள் என்றால் முழங்கை வரையிலும் , பெரியவர்கள் என்றால் மணிக்கட்டு வரையிலும் நன்கு கழுவ வேண்டும்
விலை உயர்ந்த சோப்பைத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண சோப்பே போதுமானது.
இத்துடனுள்ள படத்தில் உள்ளது போல் சோப்பு போட்டு கைகளை கழுவுவது சரியான முறையாகும்.
ஆசிரியர்கள் மட்டுமல்ல .பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக கை கழுவும் பழக்கத்தைகற்றுத் தர வேண்டும்.
அவர்களிடம் சொல்வதை விட பெற்றோரோ அல்லது ஆசிரியகளோ தேவைப்படும் சமயங்களில் கை கழுவும் பழக்கம் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கும் தானாகவே வந்து விடும்.