ஃபெப்சி ஸ்ட்ரைக் வாபஸ்! ஆனாலும்…!?

ஃபெப்சி ஸ்ட்ரைக் வாபஸ்! ஆனாலும்…!?

கோலிவுட்டில் திடீர் சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஃபெப்சி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ரஜினியின் காலா, விஜயின் மெர்சல், விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை, சசிகுமாரின் கொடி வீரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரண்டாம் நாளாக நேற்றும் ரத்து செய்யப்பட்டன. வெளி மாவட்டங்களில் நடைபெற்ற படப்பிடிப்புப் பணிகளும் பாதிப்படைந்தன. சுமார் 95 சதவீத படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிகட்டப் பணிகள் இதனால் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் இந்தப் பிரச்னையில் சமரசம் ஏற்படுத்தும் வகையில் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களின் துணையை அணுகியது ஃபெப்சி அமைப்பு. இது தொடர்பாக ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, செயலாளர் அங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில், “எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுய கவுரவம் பார்க்காமல், பொது நலத்தை மட்டுமே கருதி அன்பான வார்த்தைகளிலேயே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும் ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்ற முறையில் அன்பான வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார் ரஜினி.

அதே சமயம் 10,000 தொழிலாளர்கள் வேலையை, வருமானத்தை இழந்துள்ளனர். இது எங்களுக்குப் பெரிய பாதிப்பு. வேலை நிறுத்தம் தொடரக் கூடாது என்பதுதான் எங்களின் நிலை என்று நேற்று பேட்டியளித்த ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக இன்று அறிவித்தார். மேலும் தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபெப்சியில் அங்கம் வகிக்கும் 23 அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின், நாளையிலிருந்து படப்பிடிப்பு பணிக்கு தொழிலாளர்கள் திரும்புவதாக செல்வமணி அறிவித்துள்ளார். கூடவே  நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒப்புக்கொண்டதால், இணக்கமான சூழல் காட்ட வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தைக்கு முன்பே ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பபெறப்பட்டுள்ளதாக செல்வமணி கூறினார். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதாலும் அனைத்து தரப்பினரின் கருத்தையும் ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படுகிறது. நாளை முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பு பணிகளுக்குச் செல்வார்கள் என்றும் செல்வமணி கூறியுள்ளார். இதனிடையே தயாரிப்பளர் சங்கம் சார்பில் வெளியான அறிக்கையில், “தற்போது நடந்துவரும் திரைத்துறை சார்ந்த குழப்பங்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வகையிலும் காரணமல்ல.
இந்நிலையில்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயித்த சம்பள விதிகளுக்கு உட்பட்ட யாருடனும் படப்பிடிப்பைத் தொடர்வோம். பெப்சி தொழிலாளர்களை மட்டுமே பணியில் அமர்த்துமாறு நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை.
தொழிலாளர் நலவாரிய அழைப்பை ஏற்று நாளைய கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!