தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. பல்கலை அதிகாரிகள், இணைப்பு அந்தஸ்து வழங்கும் முன் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, நுாலகம் மற்றும் ஆய்வகம் வசதி, பேராசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி, உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வர். இதன்படி, மாநிலங்களில் உள்ள பல்கலை களும், ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகளும் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில், 9,060 போலி பேராசிரி யர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

edit aug 1

இந்த எட்டு மாநிலங்களிலும், 7,155 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவற்றில் பணியாற்றுவோர் என, 5.16 லட்சம் பேராசிரியர்களின் பெயர்கள், ஏ.ஐ.சிடி.இ., யிடம் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில், 9,060 பேர், போலியாக பதிவு செய்யப்பட்ட பேராசிரியர்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 2,452 போலி பேராசிரியர்கள் உள்ளனர். உத்தர பிரதேசத்தில், 2,184; ஆந்திராவில், 1,040; தெலுங்கானா, 950; ஒடிசா, 809; குஜராத், 742 மற்றும் கர்நாடகாவில், 363 போலி பேராசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், கடந்த கல்வியாண்டில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலியாக இடம்பெற்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அறிக்கை, மத்திய அரசால் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு,ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள், ‘நோட்டீஸ்’ அனுப்பி, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்கும்படி எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள், ” இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பல கல்லுாரிகள், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றளவில், குறைவாகவே நியமித்துள்ளன. பல கல்லுாரி களில், பேராசிரியர்கள் தகுதித்தேர்வான, ‘நெட், செட்’ போன்றவற்றில் தேர்ச்சி பெறாமலும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடிக்காமலும் உள்ளதாக புகார்கள் வருகின்றன. அதேநேரம், அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தில், தங்கள் கல்லுாரியில் பணியாற்றாத பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, உரிய அங்கீகாரம் பெற்று விடுகின்றனர்.நடப்பு கல்வியாண்டில், போலி பேராசிரியர்களுக்கு இடம் அளிக்காமல், தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்தால் மட்டுமே அங்கீகாரம் என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்று அவர்கள் கூறினர்.

Related Posts

error: Content is protected !!