ஃபேஸ்புக் நடத்தப் போகும் நவீன சந்தை!
ஃபேஸ்புக்கில் புகைப்படங்கள், வீடியோகள், மற்றும் நம் சிந்தனைகளை நம்மிடையே ‘நட்பானவர்களிடம்’ பகிர்ந்து வந்தோம். இனி அந்த ‘நட்பை’ பயன்படுத்தி வர்த்தகம் செய்யவுள்ளோம். ஆம்.. இன்று ஃபேஸ்புக் இதனை தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. ‘FaceBook MarketPlace’ என சொல்லப்படும் இந்த புதிய வசதியை பயன்படுத்தி நாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களை நமது குரூபில் உள்ளவர்களிடம் வாங்கலாம் அல்லது விற்பனை செய்யலாம்.
இந்த புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் நான்கு நாடுகளில் அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலந்து ஆகிய நாடுகளில் 18 வயது நிரம்பியவர்கள் இந்த வசதியை பயன்படுத்த வழி வகை செய்யவுள்ளது. சோதனை அடிப்படையில் வரும் இந்த புதிய வசதி பின்னர் மக்களிடம் குறைகளை பெற்று உலகம் முழுவதும் படிப்படியாக பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
‘MarketPlace’-சை ஓபன் செய்யும் போது நம்மிடையே தொடர்புள்ளவர்கள் விற்பனை செய்ய போஸ்ட் செய்திருக்கும் புகைப்படங்களுடன் ஆரம்பமாகும். இதனை வைத்து நாம் பொருட்களை வாங்க, விற்க வசதியாக ‘மேப்’ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நமக்கு எந்த வகையான பொருட்கள் தேவை என்பதை அறிய ‘தேடல்’ (Search) அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களை விற்க எளிதான நான்கு வழிமுறைகள்
1. விற்கப் போகும் பொருள் / பொருட்களை புகைப்படம் எடுத்தல்
2. பொருளின் பெயர், பொருளை பற்றிய விளக்கம் மற்றும் பொருளின் விலையை பதிவிடுதல்
3. உங்களின் விலாசத்தை உறுதி செய்தப் பின்னர் அந்த பொருளுக்கு உண்டான ‘category’ தேர்வு செய்ய வேண்டும்
4) இறுதியாக போஸ்ட் (Post) செய்ய வேண்டும்.
இந்த முறைகள் முடிந்த பின்னர், உங்களின் பொருட்கள் மற்றவர்களின் பார்வைக்கு செல்லும். இதையடுத்து வழக்கம்போல் மெசேஜ் மற்றும் கமெண்ட் மூலம் உங்கள் விற்பனையை தொடர்ந்து பின்னர் முடிக்கலாம். இந்த சேவை பயன்பாட்டிற்கு வந்தால் நீங்களும் வியாபாரி ஆகலாம்.