லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக் கணிப்பும் லயோலா மறுப்பும்!

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக் கணிப்பும் லயோலா மறுப்பும்!

வரும் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 27-33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என பண்பாடு மக்கள் தொடர்பகம் தங்களை முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்ட கருத்துக் கணிப்பை அடுத்து மேற்படி பண்பாடு மக்கள் தொடர்பகத் துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று லயோலா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில், எந்தக் கட்சி எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்பை ‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 3 வரை 40 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், லயோலா கல்லூரி முன்னாள் மாணவருமான சி.திருநாவுக்கரசு வழிகாட்டுதலின் பேரில் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள், நலத் திட்டங்களில் தமிழக அரசின் மீது மக்களின் மதிப்பீடு குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அதிமுக அரசு தாக்குப் பிடிக்கக் காரணம் என்ன என்ற கேள்விக்கு பாஜகவின் தலையீடு என 50% மக்களும், முதல்வரின் ஆளுமை காரணம் என 38% பேரும் தெரிவித்துள்ளனர்.

2019-ல் யார் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு 35.75% பேர் ராகுல் காந்தி, 27.9% பேர் மோடி, 7.1% பேர் மன்மோகன் சிங், 4.4% பேர் பிரியங்கா காந்தி, 4.22% பேர் மம்தா பானர்ஜிக்கும் வாக்களித்துள்ளனர்.

ஜிஎஸ்டி, சரிந்து வரும் வேலைவாய்ப்புகள், சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்டவை பாஜக அரசின் மீதான அதிருப்திக்கு காரணம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், திமுக தலைமையிலான கூட்டணி 27 முதல் 33 வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், அமமுக தலைமையிலான கூட்டணி 1-2 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்:

திருவள்ளூர் (தனி), ஸ்ரீபெரும்புதூர், , காஞ்சிபுரம், அரக்கோணம், மத்திய சென்னை, தென் சென்னை, தருமபுரி, வட சென்னை,திருவண்ணாமலை, ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, ஆரணி,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி (தனி), புதுச்சேரி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், சிதம்பரம் (தனி), பெரம்பலூர்

அதிமுக:

வேலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை

அமமுக:

தேனி, திருச்சி

கணிக்க முடியாதது: திருப்பூர்

இந்த நிலையில், பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. இதுதொடர்பாக லயோலா கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழகம், புதுச்சேரியில், 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற  இடைத்தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) மாநிலம் முழுவதும் கள ஆய்வு நடத்தி, இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் – 40 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில், பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைக்கும் எமது நிர்வாகத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், நடப்புத் தேர்தல்மூலம் பிரதமராவதற்கான வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான அந்த ஆய்வறிக்கைக்கும் எமது நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த சில தேர்தல்கள் தொடர்பாக எமது நிர்வாகம் சார்பில் எந்தவித கருத்துக்கணிப்பும் ஆய்வறிக்கைகளும் வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. இதுபோன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வறிக்கைகளை வெளியிட எங்கள் நிர்வாகத்தில் எந்தத் துறைகளும் தற்போது இல்லை என்று உறுதியளிக்கிறோம். இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என்று ஊடகங்கள், செய்திகள் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க விழைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!