பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒபாமா!?
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்து தற்போது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே சமயம் இவர்களுக்கு எதிராக தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் ஊழல்வாதிகள். எனவே தேர்தலில் போட்டியிடக் கூடாது. சிறைக்கு செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, தங்கள் நாட்டுக்கு அதிபராக வர வேண்டும் என பிரான்ஸ் நாட்டின் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். . இதற்காக ஒபாமா – 2017 என்ற வாசகத்துடன் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.
அந்நாட்டு நடைமுறையில் பிரான்ஸ் அதிபர் பதவிக்கு ஒபாமா போட்டியிடுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும், இந்த பரப்புரை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் நம்பிக்கையான தலைவர்கள் குறைந்துவிட்டனர் என்பதைக் காட்டும் வகையில் இந்தப் பரப்புரை அமைந்திருப்பதாகவும் கருத்து உருவாகியிருக்கிறது. தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி, தீவிர வலதுசாரியான லிபென், அதிபர் தேர்தலில் முந்துவதாகக் கூறப்படுகிறது.