படிச்ச தம்பதிகளே டைவோர்ஸ் கேட்கலாமா? டூ மச்! – சுப்ரீம் கோர்ட் கமெண்ட்
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ’டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு குடும்ப நீதி மன்றங்களில் இது குறித்து பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 35 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல… நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்…ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி..
திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்…ஒருவரை ஒருவர் காதலித்து பத்திரிக்கை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன.. இது குறித்து கவுன்சிலிங் அதிகாரிகள் நம்மிடம், “இந்தியாவில் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் நிலையில் இல்லற வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது. ஐ.டி நிறுவனம், மருத்துவமனைகள், மற்றும் பிரபல எம்.என்.சி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் தூக்கத்தை இழந்து, பணம் சம்பாதிப்பதால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில், திருமணத்திற்கு முன்னர் சந்தோஷமாக இருக்கும், ஆண்கள் மற்றும் பெண்கள், அதன் பின்னர் அந்த மகிழ்ச்சி இல்லை என்று கூறுகின்றனர். எப்பொழுதும் பணம், வேலை என்று இருக்கும் அவர்களால் இல்லற வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடிவதில்லை.
சமீபகாலமாக இந்தியாவில் திருமண பந்த முறிவு பெருகிக் கொண்ட்ஜுதான் வருகின்றன.1980களில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விவாகரத்து வழக்குகளை கவனிக்க 2 கோர்ட்டுகள்தான் இருந்தன. இன்று 16க்கும் அதிகமான கோர்ட்டுகள் விவாகரத்து வழக்குகளைக் கவனிக்க இருந்தும் போதவில்லை.
மராத்திய மாநிலத்தில் ஓராண்டில் சட்டப்படி மணமுறிவு பெற்றவர்கள் 43000. அதில் மும்பையில் 20,000, புனேயில் 15000.
கல்யாணமாலை என்ற இணைய தளத்தில் இரண்டாவது திருமணத்திற்கானதனிப்பிரிவு வந்தாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. secondshaadi.com பிரிவில் இத்திருமணத்திற்குப் பதிவு செய்திருப்பவர்களின் வயது சுமார் 25 லிருந்து 35க்குள் இருப்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்திருக்கின்றன” என்றனர்
இதனிடையே உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருக்கும் மணமுறிவுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மண முறிவுகளின் விகிதாச்சாரம் 1.1% தான் . அமெரிக்காவில் 50% மணமுறிவுகள். அமெரிக்காவைப் பொறுத்தவரை வெள்ளைக்கார தம்பதிகளின் மணமுறிவுகளை விட ஆப்பிரிக்க அமெரிக்கன் (கறுப்பினம்) வெள்ளைக்கார அமெரிக்க தம்பதியரின் மணமுறிவு விகிதமே அதிகம்.ஆப்பிரிக்கன் அமெரிக்கன் 32%, வெள்ளைக்கார தம்பதியர் 21%, .ஆப்பிரிக்க இனத்தவரின் குடும்ப பின்னணியும் அதன் காரணமாக அவர்களிடம் நிலவும் கலாச்சார வேறுபாடுகளுமே இந்த மணமுறிவுகளுக்கு காரணம் எனலாம். ஆனால் இந்தியாவில் மணமுறிவுகளுக்கு காரணம் இங்கு நிலவும்
சாதி, மத வேறுபாடுகளா? இந்தக் கேள்வி எழும் நிலையில் இந்தியாவில் விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதிலும் படித்த தம்பதிகளே அதிகமாக விவாகரத்து கோருவதாகவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் விடுமுறைக் கால அமர்வான நீதிபதிகள் ஏ.எம். சாப்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை நேற்று வந்தது.விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், “ஏன் இப்படி படித்த நபர்கள் ஒரு சிறிய காரணத்துக்காக விவகாரத்துக் கோருகிறுர்கள்.. சண்டை போடுகிறீர்கள். இதனை ஒன்றாக அமர்ந்துபேசி உங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளக் கூடாதா” என்று கருத்துக் கூறினர்.மேலும், இவர்கள் இருவரது தரப்பினரும் ஒன்றாக பேசி ஒருவருக்குள் ஒருவர் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். மேலும் உங்களை தம்பதியராகப் பார்ப்பதையே நீதிமன்றம் விரும்புகிறது என்றும் ஆலோசனை வழங்கினர்.
முன்பெல்லாம் திருமண பந்தம் தொடர்பான ஒரு சில வழக்குகள்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும். ஆனால், தற்போது தனிநபர் உரிமை விழிப்புணர்வு அடைந்து விட்டதாலும், பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் அதிகரித்திருப்பதும் (ஒரு சில பெண்கள் இதனை தவறாகப் பயன்படுத்துவதும் உண்டு), மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றால் உள்ளூர் நீதிமன்றங்களில் குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்குகள்தான் அதிகம் வருகிறது. இந்த நீதிமன்ற அமர்வு முன்பு இதேபோன்ற விவகாரத்து வழக்கு வந்திருந்தது. எனவே, தம்பதிகள் விடுமுறை எடுத்து அதனை ஒன்றாகக் கழித்து மீண்டும் தங்களது வாழ்க்கையை புதிதாகத் துவக்குங்கள் என்று அறிவுறுத்தினர்.