பல்லையும் ,ஈறையும் பாதுகாத்தாலே பாதி வியாதிகளிடமிருந்து எஸ்கேப் ஆகலாம்!

பல்லையும் ,ஈறையும் பாதுகாத்தாலே பாதி வியாதிகளிடமிருந்து எஸ்கேப் ஆகலாம்!

ஒரு தாவரம் பலமாக இருக்க வேண்டுமென்றால் அதன் வேரை தாங்கி இருக்கும் மண்ணும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா? அதே மாதிரி பல் ஈறு என்னும் பரப்பில் பதிந்து வளரும் பற்கள் பலமாக இருக்க வேண்டுமானால், ஈறும் பலமாக இருக்க வேண்டுமாக்கும். ஃபாஸ்ட் புட், இறைச்சி,ஐஸ் கிரீம் கள் மூலம் கேஷூவலாக வாய்க்குள் நுண்கிருமிகள் நுழைந்து பற்களை கெடுத்து விடாவண்ணம் பற்களுக்கே அரணாக இருக்க கூடிய ஈறுகளை சீராக பாதுகாக்காவிட்டால் பற்கள் கொஞ்ச கொஞ்சமாக ஆட்டம் காண ஆரம்பித்து விடும்.

dental may 25

இதனிடையே இன்றைக்கும் பற்களை வெண்மையாக துலக்கி பாதுகாக்கும் நம்மில் பலர், ஈறுகளை பற்றி அக்கறைப் படுவதில்லை. பற்களை விட பல் ஈறுகளில் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே பற்களை பாதுகாப்பது போல் பல்ஈறுகளையும் பாதுகாக்க வேண்டும். இனிப்பு பண்டங் களை அதிகம் உண்ணுதல், அமிலம் மற்றும் காரத்தன்மையுள்ள பொருட்களை அதிகம் உட் கொண்டு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல், நாட்பட்ட வயிற்றுப் புண்கள், தொண்டை சதை வளர்ச்சி, சைனஸ் நோய், அதைத் தொடர்ந்த குறட்டை, சீரற்ற பல்லமைப்பு, ஸ்டீராய்டு மருந்துகள், பாதரசம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளுதல், வேதிப் பொருட்களால் செய்யப்பட்ட துரித உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள், குளிர்பானம் மற்றும் தீவிரகிருமித் தொற்று போன்றவற்றால் பல் ஈறு பாதிக்கப் படுகிறது. பல் ஈறு பாதிப்பதின் அறிகுறியாக பல்லில் வலி, ஈறு பகுதிகளில் வீக்கம் அல்லது கரைவு, வாய் துர்நாற்றம், ஈறில் ரத்தக்கசிவு, பல்லாட்டம் மற்றும் உணவு உட்கொள்ளும் போது வாயில் எரிச்சல் மற்றும் வலி போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.

அதே சமயம் பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நம்மால் பல பல் வியாதிகளை தடுக்க முடியும். பற்கள் இயற்கையாகவே சிலருக்கு அழகாய், வெண்மையாய், வரிசையாய், உறுதியாய், கடினமான பொருட்களையும் உடைத்து கூழாக்கும் சக்தியுடன் அமைகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பலவித கோணல்களுடன் வீபரீதமாக அமைந்துள்ளன. பல் அழகாக வரிசையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல் கிளிப்புகள் அணிகின்றனர். துருத்தி நிற்கும் பற்களை பலமாக உள்ளே இழுக்கும் இது போன்ற கிளிப் முறைகளால் முகத்தில் அமைந்துள்ள நரம்புகளிலும் ரத்தக்குழாய்களிலும் அழுத்தம் அதிகமாகி மிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வகை வைத்திய முறையை தவிர்ப்பது நலம்.

ஆயினும் பற்களின் பராமரிப்பில் குழந்தைப் பருவம் முதலே முழு கவனமும் செலுத்தினால் பற்கள் அழகாகவும் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். அதைப் பெறுவதற்கு உள்ளும் வெளியுமாக உணவும் மருந்துகளும் உதவுகின்றன.எலும்பு தாதுவிலிருந்துதான் பற்கள் வலிமை பெறுகின்றன. அதனால் நமது உடலில் எலும்பை பலப்படுத்தும் உணவும் பானமும் மருந்துகளும் சிறு வயது முதலே உட்கொள்ளத் தொடங்கினால் எலும்புடன் பற்களும் உறுதிப்படுகின்றன. உணவில் பால் – தயிர் – மோர் – வெண்ணெய் – நெய் மருந்துகளில் – மான் கொம்பு – பவிழம் – முத்து – முத்துச்சிப்பி – சோழி – அப்ரகம் – இரும்பு ஆகியவற்றை புடம் மற்றும் பாவன முறைகளாக சுத்தி செய்து உள்ளுக்குச் சாப்பிட பற்கள் விரைவில் பலம் பெறுகின்றன.

வெளிவழியாக பற்களை நம்மால் இருவழிகளில் பாதுகாக்க முடியும். அவை
1. சுத்தி முறைகள்
2. வாய் கொப்பளித்தல்

பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. தொடர்ந்து இதை உபயோகிப்பதன் மூலம் பற்கள் தேய்வை அடையாமலும், ஈறுகளும் வேர்களும் உறுதியும் பெறுகின்றன. வலி வராமலும், புளிப்புச் சுவையினால் ஏற்படும் கூச்சமும் உண்டாகாது. கடினமான உணவுகளையும் எளிதில் உடைத்து சுவைத்துச் சாப்பிட நல்லெண்ணெய் கண்டூஷம் உதவுகிறது.பல் துலக்கும் முறையும், எப்போதெல்லாம் பல் துலக்க வேண்டும் என்ற விஷயத்தையும் சிரத்தையுடன் அனுஷ்டிப்பதன் மூலம் ஊத்தை அழுக்கு ஆகியவற்றை முழுமையாக அகற்ற முடியும். அவ்வாறு சுத்தமாக வைத்திருந்தால்தான் உணவின் சாரத்தை பற்கள் முழு அளவில் பெற்று பயனடையும்.

மேலும் காலையில் கண்விழித்ததும் மலஜலங்களை போக்கி வாயை நன்கு தண்ணீரினால் கொப்பளித்து பிறகு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்டதும் பல் துலக்க வேண்டும். ஆனால் இன்று அது நடைமுறை சாத்யம் அல்லாததால் இரவில் படுக்கும்முன் பல் துலக்குவது நல்ல பழக்கமாகும். இரவில் பல் தேய்த்த பிறகு கால்சியம் சத்து நிறைந்த பால், பழ ரஸங்களை அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் பற்களில் சத்து படிவதால் பலவித பல்நோய்களும் பசியைத் தூண்டும். நெருப்பும் கெட்டுவிடும். ராத்திரி முழுவதும் வாயில் பற்களின் இடுக்குகளில் எவ்வித பண்டமும் தங்கும்படியாக விடக்கூடாது.

இன்று நாம் பிரஷ்தான் பல் தேய்க்க பயன் படுத்துகிறோம். நம் முன்னோர்கள் ஈரமுள்ள ஆல், அத்தி, எருக்கு, கருவேல், இலந்தை மரக்குச்சிகளை உபயோகித்து பற்களை பாதுகாத்தனர். இவ்வகை குச்சிகள் துவர்ப்பு, கசப்பு, காரம் போன்ற சுவை நிரம்பியவை, வாய் மற்றும் பற்களில் அழுக்கு சேராதபடி பாதுகாப்பதில் இச்சுவைகள் பெரிதும் உதவுகின்றன.
ஆலங்குச்சியினால் காந்தி, புங்கங் குச்சியினால் விஜயம், இச்சியினால் பொருள் விருத்தி, இலந்தையினால் இனிமையான குரல்வளம், கருங்காலியினால் நல்ல வாஸனை, அத்தியினால் வாக்ஸித்தி, இலுப்பையினால் திடமான செவி, நாயுருவியினால் தைர்யமும், புத்தி கூர்மையும், மருத மரத்தினால் ஆயுள் விருத்தி, தலைமயிர் நரையின்மை, போன்றவை ஏற்படுவதாக பழைய நூல்களில் காண்கின்றன.

அரச மரக்குச்சி மங்களகரமானது. பல் தேய்க்க பயன்படுத்தக்கூடாது. ஆலம் விழுதுகள் பல் தேய்ப்பதற்கு உத்தமமானது. பற்களை உறுதிப்படுத்துவதில் நிகரற்றது. நகர வாழ்க்கையில் குச்சிகள் சாத்தியமில்லை என்ற எண்ணம் உள்ளது. பிரஷ் உபயோகிப்பதால் குச்சிகளின் நன்மை எதுவும் கிடைக்காதென்றாலும் வேறவழியில்லாது பயன்படுத்துபவர்கள் அதில் அழுக்கு சிறிதும் சேராதவாறு அடிக்கடி வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும்.பல்பொடிகளை பற்களில் தேய்க்கும் போது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிகவும் அவசர ஸமயங்களில் மட்டுமே விரலை பல் தேய்க்க பயன்படுத்தலாம். வைத்ய சாஸ்திரம் மட்டுமல்ல, தர்ம சாஸ்திரங்கள் கூட விரலினால் பல் துலக்குவதைப் பாபம் என்று கண்டிக்கின்றன.பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்ப் பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு கொப்பளிக்க வேண்டும்.ஆயுர்வேத மருந்துகளில் பல் பாதுகாப்பிற்கு அரிமேதஸ் தைலம், 10 சொட்டு வெந்நீருடன் காலை, இரவு பல் தேய்த்த பிறகு கொப்பளிக்க பயன்படுத்துதல் நலம் தரும்.

error: Content is protected !!