தெலுங்கானா முதல்வர் சென்னை வந்து ஸ்டாலினுடன் ஆலோசனை!

தெலுங்கானா முதல்வர் சென்னை வந்து ஸ்டாலினுடன் ஆலோசனை!

நாட்டில் மூன்றாவது அணிக்கான முயற்சியை முன்னெடுத்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே  என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ஆம் தேதி வர உள்ளன. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார். அதைப்போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மே 13-ஆம் தேதி சந்தித்துப் பேசுவதற்கு சந்திரசேகர ராவ் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுலை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தேர்தல் முடிவுக்கு முன்பே சந்திரசேகர ராவைச் சந்தித்தால், காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதுபோல் ஆகிவிடும் என திமுக தரப்பில் கருதப்படுகிறது.

ஆனால் தொடர் முயற்சிகளின் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலனை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திங்கள் மாலை 4 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய மைச்சர் டி.ஆர், பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!