எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியின் புது அறிவிப்புகள்!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியின் புது அறிவிப்புகள்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது. இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் எம் ஜி ஆர் பாடல்களை பாடி பாடகராக அசத்தினார். பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவும் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மாலை 3:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் நூற்றாண்டு விழா நிறைவு மேடைக்கு வருகை தந்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் திரையுலகில் பணியாற்றிய பி.எஸ். சரோஜா, டாக்டர் சாரதா, பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா,வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு, ஷீலா, ராஜஸ்ரீ, ஜெயசித்ரா, குட்டி பத்மினி, சகுந்தலா, விஜயகுமார், பாக்கியராஜ், ஆரூர் தாஸ், அ.முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன்,ராமகிருஷ்ணன், இதயக்கனி விஜயன், ராமமூர்த்தி, முத்து, சம்பத் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் இதோ:

சென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைத்தல் கழகம் உருவாக்கப்படும்

கிராம மக்கள் தங்களது வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் வளர்க்கும் வகையில் முதலமைச்சர் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோ மீட்டர் தூரம் உள்ள மவுண்ட் – பூந்தமல்லி- ஆவடி நெடுஞ்சாலைக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நெடுஞ்சாலை என்று பெயர் சூட்டப்படும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாக விளங்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும்.

ராயபுரம் தொழிற்கல்வி மகளிர் விடுதி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் 3 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 விடுதிகள் கட்டப்படும்.

சென்னை பள்ளிகரணை பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட புறநகர் மருத்துவமனை ஒன்று சுமார் 31 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சர்தார் படேல் சாலையில், மத்திய கைலாஸ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 12 அறுவை அரங்குகள் மற்றும் 260 படுக்கை வசதிகள் கொண்ட அடித்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு , மகப்பேறு பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ரத்தம் சுத்திகரிப்பு பிரிவு, பொது மருத்துவம், உடனடி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் கூடிய ஒரு அலகு 141 கோடியே, 42 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், ஊடு கதிர் அலகு, செயற்கை சுவாசக் கருவிகள், அல்ட்ரா சவுண்ட் கருவி போன்ற மருத்துவ கருவிகள், 134 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

error: Content is protected !!