மனைவியை கட்டாயப்படுத்தி உறவுக் கொள்வது ரேப் ஆகாது! – மத்திய அரசு!
மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வதை கற்பழிப்பு குற்றமாக்கிவிட கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்த நபர்கள் மூலமே நடைபெறுவதாகத் தரவுகள் கூறுகின்றன. அதிலும், திருமணமான பெண்களுக்கு அவர்களின் கணவர் மூலமாக அதிக அளவு பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன. குறிப்பாக, மனைவியின் சம்மதம் பெறாமல், அவரது விருப்பத்தை மீறிக் கட்டாயமாகப் பாலுறவு கொள்வது அதிகமாக உள்ளது. எனினும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இது குற்றமாகக் கருதப்படுவதில்லை. மனைவியிடம் கணவன் கட்டாயப்படுத்தி உறவுகொள்வதை இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவின் கீழ் பாலியல் வல்லுறவுக் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி(பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஒருவரின் சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் கோலின் கோன்சால்வெஸ், “திருமணம் என்பது கற்பழிப்பு நடத்துவதற்காக அளிக்கப்பட்ட உரிமம் அல்ல” என்று வாதிட்டார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு பெண்ணை அவளது கணவரும், மைத்துனிகளும் கொடுமைப்படுத்துவதைத் தடுப்பதற்காக உள்ள இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498ஏ தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்துவருவதாக உச்ச நீதிமன்றமும் பல்வேறு நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்துள்ளன. இந்நிலையில் மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் வல்லுறவுக் குற்றமாக்கிவிட்டால் அது கணவர்களைப் பழிவாங்குவதற்கான கருவியாக மாறிவிடும் என்று மத்திய அரசின் பிரமாணத்தில் தெரிவித்துள்ளது. அதிலும் கல்வியறிவுக் குறைபாடு, பெண்களுக்குப் பொருளாதார வலிமையின்மை, சமூகத்தின் மனநிலை, பரந்துபட்ட வித்தியாசங்கள், வறுமை ஆகிய பிரச்சினைகளால் இத்தகைய சட்டம் இந்தியாவுக்கு ஒத்துவராது என்று வாதிடும் மத்திய அரசு, இது திருமண பந்தத்தைச் சீர்குலைப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.