ரயில் கொள்ளை மற்றும் ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் பரிசு!
ரயிலில் ரூ.5.78 கோடி பழைய நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும், திருச்சி ராமஜெயம் கொலை பற்றியும் தகவல் அளிப்போருக்கும் ரூ.2 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.5.78 கோடி பணத்தை மர்ம நபர்கள் ரயிலின் மேற்கூரையை பெயர்து கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். சம்பவம் நடைபெற்று 1 ஆண்டுகள் கடந்தும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ரயிலில் ரூ.5.78 கோடி பழைய நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக தகவல் அளிப்போருக்கும் ரூ.2 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிபிசிஐடி இன்று அறிவித்துள்ளது. இதுபோல், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கிலும் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலும் இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கு குறித்து தொலைபேசி, செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக பொதுமக்கள் தகவல் தரலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இதுகுறித்த தகவல் தர 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 044-28511600, செல்போன்-வாட்ஸ்-அப் எண்கள்: 99400 22422, 99400 33233 ஆகும்.