பலான குற்றம் செய்வோரை கல்லால் அடித்து மரணத் தண்டனை! – புரூனே அரசு அறிவிப்பு!

பலான குற்றம் செய்வோரை கல்லால் அடித்து மரணத் தண்டனை! – புரூனே அரசு அறிவிப்பு!

ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் எனப்படும் தன்பாலின உறவு, கூடா நட்பு அல்லது மாற்றுக்காதல் எனப்படும் கள்ளக்காதல் போன்ற செயலுக்கு புரூனே நாட்டில் கல்லால் அடித்து மரண தண்டனை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதிலும் உலகம் முழுதும் பலநாடுகளில் ’காட்டு மிராண்டித் தனமானது’ என்று கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை இந்த புதிய தண்டனைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந் நாட்டில் தகாத உறவும் (கள்ள உறவு), ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப் படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்தனர். தண்டனை கடுமையாகிறபோதுதான் குற்றங்கள் நடப்பது முடிவுக்கு வரும் என கருதிய அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்தார். அதிலும் மேற்படி தவறு செய்பவர்களை கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனையை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பாலியல் பலாத்காரம், திருட்டு ஆகியவற்றுக்கும் அதிகபட்ச மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முகமது நபியை கேலி செய்வது அவதூறு செய்தால் இஸ்லாமியராக இருந்தாலும் சரி அல்லாதவர்களாக இருந்தாலும் சரி மரண தண்டனை நிச்சையம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்கனூண்டு நாட்டில் இவ்வளவு கடினமான சட்டங்களை அதன் ஆட்சியாளர் சுல்தான் ஹசனல் போல்கியா அறிமுகம் செய்துள்ளார். பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு இந்தச் சட்டங்கள் முழுதும் மீண்டும் முழுவீச்சுடன் செயல்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். அதே போல் திருடர்களுக்கு தண்டனையாக கையை, காலை வாங்குவது என்பதும் தெற்காசிய நாட்டில் தேசிய மட்டத்தில் முதன் முதலில் புருனெயில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கடுமையான தண்டனைச் சட்ட நிறைவேற்றங்களில் சவுதி அரேபியாவுடன் இணைந்துள்ளது புருனெய். எனினும் இந்த கொடுமையான தண்டனை அறிவிப்புகள் உலக நாடுகளிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்த ஐநா, இவற்றை ‘கொடூரமானதும், மனிதத்தன்மையற்றதும்’ என்று சாடியுள்ளது.

இதனையடுத்து நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாப் ஸ்டார் எல்டன் ஜான் தலைமையில் புருனெய் நாட்டு விடுதிகளை புறக்கணிக்க வேண்டும் என பிரபலங்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனினும் இந்த சட்டங்கள் குறித்து ஆட்சியர் தெரிவிக்கையில் “இந்த நாட்டில் இஸ்லாமிய கொள்கைகள் வலுவாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்

error: Content is protected !!