அப்போதும் சொன்னார்கள் கருணாநிதி அவ்வளவுதான் என்று!

அப்போதும் சொன்னார்கள் கருணாநிதி அவ்வளவுதான் என்று!

கருணாநிதிக்கு 19 வயது இருக்கும் போது, அவர் போட்ட மேடை நாடகத்துக்காக அடித்து உதைக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டார். வீசிய கும்பல் அன்று சொன்னது. கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1953ல் ஒரு விபத்தில் கருணாநிதியின் கண் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அன்றைக்கு சில பத்திரிக்கைகள் எழுதின.கருணாநிதி அவ்வளவுதான் என்று!

திமுக தேர்தலில் போட்டியிட தயாரான போனது 1957ல் நாகப்பட்டிணத்தில் போட்டியிட தொகுதியைத் தயாராக வைத்திருந்தார் கருணாநிதி. ஆனால், அண்ணா குளித்தலையில் போட்டியிடச் சொன்னார். அன்றைக்கு கட்சிக்குள் கருணாநிதியின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் சொன்னார்கள். கருணாநிதி அவ்வளவுதான் என்று !

1962ல் அண்ணா இருக்கும்போதே கருணாநிதி திமுகவின் பொதுச்செயலாளர் ஆகியிருக்க வேண்டியவர். ஆனால், சில காரணங்களுக்கு அது நடக்கவில்லை. அப்போதும் சிலர் சொன்னார்கள். கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1967-ல் ஆட்சியைப் பிடித்த போது அமைச்சராக கருணாநிதி கேட்டது, காவல்துறை, அண்ணா கொடுத்தது பொதுப்பணித்துறை! அப்போதும், சிலர் சொன்னார்கள், கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1969-ல் முதல்வரான ஏழே மாதத்தில், இந்தியாவின் அரசியலமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் மாநில சுயாட்சி முழக்கத்துக்காக ராஜமன்னார் கமிட்டி அமைத்தார். அப்போதும் சிலர் சொன்னார்கள். ஆழம் தெரியாமல் கால் விடுகிறார். இனி கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1972-ல் வருமான வரி சோதனைக்குப் பயந்து கட்சியில் குழப்பம் செய்த எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டார். வெளியேறிய எம்.ஜி.ஆரின் புதுக்கட்சி தொடங்கியதும் சொன்னார்கள், கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1976 எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் கடைசி திமுககாரனின் எலும்பையும் தேடித்தேடி உடைத்தது மத்திய அரசு… அப்போதும் அவரது எதிரிகள் சொன்னார்கள், கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1980-ல் காங்கிரஸோடு சரிபாதி பங்கீட்டோடு கூட்டணி வைத்தும், காங்கிரஸ் தலைவர்கள் செய்த குழப்பத்தால் தோற்றுது திமுக. அப்போதும் சொன்னார்கள், கருணாநிதி அவ்வளவுதான் என்று!

13 ஆண்டுகாலம் கழித்து 1989ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் அரசு 1991ல் கலைக்கப்பட்டது. அடுத்த தேர்தலில் கருணாநிதித்தவிர்த்து திமுக வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அன்றைக்கும் சொன்னார்கள் கருணாநிதி அவ்வளவுதான் என்று!

1993ல் வைகோ கட்சியிலிருந்து வெளியேறி புதுக்கட்சித் தொடங்கினார்… 9 மாவட்டச் செயலாளர்கள் அவருடன் பிரிந்து சென்றார்கள்… அன்றைக்கும் சொன்னார்கள் கருணாநிதி அவ்வளவுதான் என்று!

2001ல் நள்ளிரவு நேரத்தில் 78 வயது மனிதனை, அடித்து துன்புறுத்தி இழுத்துச் சென்றது ஜெயலலிதாவின் காவல்துறை. உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதியைப் பார்த்த சொன்னார்கள். கருணாநிதி அவ்வளவுதான் என்று!

2009ல் 85 வயதில் முதுகுண்டுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தள்ளுவண்டியைக் கால்களாக்கிக் கொண்டு கருணாநிதி வீட்டுக்கு வந்தார். அப்போதும் சொன்னார்கள், கருணாநிதி அவ்வளவுதான் என்று!

2011க்குப் பிறகு நடந்த எல்லா தேர்தல்களிலும் திமுக தோற்றது. அப்போதும் சொன்னார்கள் கருணாநிதி அவ்வளவுதான் என்று!

ஓராயிரம் முறைகள் சொல்லப்பட்டுவிட்டன கருணாநிதியைப் பார்த்து ‘கருணாநிதி இனி அவ்வளவுதான் என்று’.

ஆனால், நெருப்பை நீராகத் திரிப்பது போல அத்தனை எதிர்ப்பு மலைகளையும் தூள் தூளாக நொறுக்கிவிட்டு கருணாநிதி ஒவ்வொரு முறையும் எழுந்துவந்தார்.

அத்தனைக்கு காரணம், அண்ணாவே பொறாமைப்பட்ட உழைப்பு, பெரியாரே வியந்துபோன நெஞ்சுரம் !

பீனிக்ஸ் பறவை வாழ்ந்ததற்கு அறிவியல் சான்று கிடையாது. ஆனால், கருணாநிதி வாழ்கிறார். அதற்கு 10 கோடி தமிழரும் சாட்சி.

விவேக் கனநாதன்

error: Content is protected !!