மோடியாய நமஹா ! – ரவீந்திரநாத் ஓப்பன் பேட்டி =வீடியோ
அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ.பி. ரவீந்திரநாத், “நாட்டை புதிதாக கட்டமைப்பதற்கான பணியில் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
இன்று (ஆகஸ்டு 12) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஓ.பி. ரவீந்திரநாத். நாடாளுமன்றத்துக்கு சென்று முதல் கூட்டத் தொடர் எவ்வாறு இருந்தது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“பாரத பிரதமர் மோடி சிறப்பான இந்தியாவை, புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான முயற்சியாக இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சிறப்பாக அமைந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடாளுமன்ற கூட்டத் தொடர் இது. மற்ற மாநில எம்.பி.க்கள் எனக்கு சக எம்பி என்கிற முறையில் மரியாதை கொடுத்து நல்ல நண்பர்களாகப் பழகுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மக்களவையில் திமுக எம்பி டிஆர்பாலு முதுகெலும்பற்றவர் என்று விமர்சனம் செய்தது பற்றிக் கேட்டதற்கு, “தமிழ்நாட்டு உரிமைக்காகதான் நான் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் டி.ஆர்.பாலு அப்படி பேசினார் என்றால் அதுபற்றி நீங்கள் அவரிடம் கேளுங்கள். அவர் சொல்வதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.
நாடாளுமன்றத்தில் உங்களது பேச்சுகள் எல்லாம் பாஜகவை முழுமூச்சாக ஆதரிப்பது போலவே இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே என்ற கேள்விக்கு, “பாஜகவுக்கு என்றில்லை… நாட்டின் வளர்ச்சிக்காக பாரதப் பிரதமர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன்” என்று கூறினார் ஓ.பி. ரவீந்திரநாத். நீட் விவகாரம் பற்றி பேசியபோது, “நீட் விவகாரம் பற்றி தமிழக அரசின் நிலைமையை, தமிழக முதல்வரின் கோரிக்கையை நான் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தேன்” என்றார் ரவீந்திரநாத்.