அமெரிக்காவில் மிதமிஞ்சிய போதை மருந்தால் ஆண்டுக்கு 50,000 பேர் பலி
ஹெராயின், அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் உலகில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தி, அவர்களை மட்டுமல்லாமல், தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு, அதற்கு அடிமையாகி உள்ளனர். இன்றைய சூழலில் போதைப் பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருட்களை கும்பல் கடத்துகிறது.
அதிலும் உலகளவில் 15 வயது முதல் 64 வயது உள்ளவர்களில் போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 12 கோடியே 90 லட்சம். இதில் வாழ்க்கையில் ஒரு முறையாவது போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 45 கோடியே 10 லட்சம். மொத்தமாக 839 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐ.நா., சபை போதைப்பொருள் குற்றப்பிரிவு சார்பில் 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மிதமிஞ்சிய போதை மருந்து காரணமாக ஆண்டுக்கு 50,000 அமெரிக்கர்கள் இறப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.வல்லரசு நாடாகத் திகழ்ந்தாலும் போதை மருந்துகளை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து திணறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன.
அதாவது கார் விபத்து, துப்பாக்கி சூடு ஆகியவற்றால் ஓராண்டில் இறக்கும் அமெரிக்கர்களை விட போதை மருந்து பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதன்படி, ஆண்டுக்கு சுமார் 50,000 அமெரிக்கர்கள் போதை மருந்து பழக்கத்தால் இறக்கின்றனர்.
ஹெராயின் என்னும் போதை மருந்தால் 12,989 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக ஹெராயின் உட்கொள்ளுவதால் தினசரி 44 பேர் இறப்பதாக கூறப்படுகிறது. வலி நிவாரணிகளை உட்கொள்வதால் ஆண்டுக்கு 17,536 பேர் இறக்கின்றனர். அதிகளவிலான அமெரிக்கர்கள் உயிரிழக்க இதய நோய் முதன்மைக் காரணமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.