ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 7 வயது சிறுமி தேவி மரணம்
திருவண்ணாமலை மாவட்டம் புலவன்பாடி கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமி தேவி 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.20 அடி ஆழத்தில் சிக்கிய சிறுமியை கயிறு கட்டி மேலே இழுக்கும் பணி நடந்தது. ஆனால், கயிறை இழுக்கும் போது கயிறு அறுந்ததால், சிறுமியை மீட்கும் பணி தொய்வடைந்தது. கை போன்ற அமைப்பு கொண்ட இயந்திரத்துடன், சிறப்பு நிபுணர் குழு சிறுமியை 8 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.சிறுமியை அங்கிருந்த மருத்துவ குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 200 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் குழாய் கிணற்றை சாக்குப் பை கட்டி மூடி வைத்திருந்தனர். அந்த நிலத்தின் அருகில் பழனி என்பவரின் நிலம் உள்ளது.
பழனி தனது நிலத்தில் பயிரிப்பட்டு இருந்த மணிலாவை பறிப்பதற்காக தனது மனைவி மலர்கொடி மற்றும் 7 வயது மகள் தேவியுடன் இன்று காலை 7 மணிக்கு நிலத்துக்கு வந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவி, சாக்கு பையால் மூடிவைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். மகள் குழாய் கிணற்றில் தவறி விழுந்ததைக் கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து களம்பூர் ஆரணி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அவர் இருக்கும் இடத்திற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. உள்ளே இருந்து சிறுமியின் குரல் கேட்டதால், பக்கவாட்டில் குழிதோண்டி மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்திறகு களம்பூர் ஆரணி போலீசாரும் வந்து மீட்பு பணிக்கு உதவினர். மாவட்ட கலெக்டரும் அங்கு முகாமிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். சிறுமியை மீட்டதும் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்தது.
ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 20 அடி வரை தோண்டியபோதும் சிறுமி இருக்கும் இடத்தை நெருங்கவில்லை. அதற்கு கீழே இருந்தது. குழந்தையை சுற்றி மண் இருந்ததால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மேலும் பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கிடையே கயிறு போட்டு இழுக்கும் முயற்சி தோல்வியடைந்தது. கயிறு அறுந்ததால் மீண்டும் குழந்தை உள்ளே விழுந்து விட்டது. 3-வது முறையாக கயிறு போட்டு மீட்க முயற்சி செய்தனர்.
8 மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்தும் குழந்தை மீட்கப்படாதால் பெற்றோரும், பொதுமக்களும் அச்சமடைந்தனர். அதன்பின்னர் கைவடிவ கருவியைக் கொண்டு மீட்க முயற்சி செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலை 6.15 மணியளவில் பக்கவாட்டில் மேலும் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி முடித்தபிறகு, பக்கவாட்டில் ஓட்டை போட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டதால், சிறுமி சுயநினைவை இழந்து இருந்தது. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், சிறுமியை வேலூர் மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் மருத்துவமனையே சோகத்தில் மூழ்கியது. புலவன்பாடி கிராமும் சோகத்தில் மிதந்தது.