இஸ்ரோவை தாண்டி, வெளி விஞ்ஞானிகளும், பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி!
ஓசூரில், தனியார் பள்ளி ஒன்றில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், இஸ்ரோ செயற்கை கோள் மைய (பெங்களூரு) இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 1
அப்போது அவர்.”செவ்வாய் ஆராய்ச்சியில், இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது. தற்போது இஸ்ரோவை தாண்டி, வெளியில் உள்ள விஞ்ஞானிகளும், பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர். அதற்கான அறிவிப்பை மிக விரைவில், அனைவரையும் வரவழைத்து, கருத்தரங்கு நடத்தி அதன் மூலமாக வெளியிட உள்ளோம்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியமானது. மாணவர்கள் புத்தக படிப்புடன், நாட்டு நடப்புகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். மாணவ சமுதாயம் தற்போதுள்ள வளர்ந்த சூழ்நிலையில், அறிவியலை வெறும் பாடமாக படிப்பதுடன் அவற்றை வாழ்க்கையில் உணர்வுப் பூர்வமாக அனுபவித்து பயில்வதால் கல்வியின் தரம் உயர்வதுடன், நமது மாணவர்களின் அறிவியல் திறன் மேலும் மேம்படும்.
மங்கள்யான் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக, இந்தியாவில் இதுவரை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ரக 5 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. ஐ.ஆர்.எஸ். 1 எப் மற்றும் 1 ஜி ஆகிய 2 செயற்கை கோள்களின் இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் இந்த இரு செயற்கைகோள்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.