பலரை மாற்றிய திறனாளி ஜக்கு என்ற ஜெகதீஷ் மறைவால் மனம் கலங்குகிறது!

பலரை மாற்றிய திறனாளி ஜக்கு என்ற ஜெகதீஷ் மறைவால் மனம் கலங்குகிறது!

றப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும் அது சிலருக்கு ஏற்படும் போது உடலும் மனதும் கிடந்து தவியாய் தவிக்கிறது.கோவை தம்பி ஜக்கு என்ற ஜெகதீஷின் மரணமும் அப்படித் தான் என்னை உண்ண விடாமல் உறங்கவிடாமல் வதைக்கிறது.ஒன்பது வருட பழக்கம், பெரும் பாலும் போனில்தான் பேசிக் கொள்வோம். எப்போது போன் செய்தாலும் ‘அண்ணா’ என்று அன்பொ ழுக அழைப்பார் அந்த ‘அண்ணா’ என்ற வார்த்தை என்னை உருக்கி விடும்.விரல் மட்டுமே அசையும் அந்த உடலுக்குள்தான் எத்தனை ஆற்றல் எழுத்தாளர் பேச்சாளர் கம்ப்யூட்டர் தொழில் நுட்ட வல்லுனர் என்று அவருக்குள் பல முகம் உண்டு29 வயதாகும் ஜக்கு இப்போதுதான் கோவை யின் பெருமையாக உயரத்தில் ஏறியிருந்தார் இன்னும் சில ஆண்டுகளில் புகழின் சிகரத்திற்கே சென்று இருப்பார் அதற்குள் மரணம் வந்துவிட்டது.சாதாரண காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றவரை பிணமாக வீட்டிற்கு கொண்டு வர நேர்ந்த கொடுமை யாருக்குமே நேரக்கூடாத ஒன்றுதான்.

நிஜக்கதைகளின் வாசகரான ஜக்குவை நான் சந்தித்ததே ஒரு மறக்கமுடியாத அனுபவம்.வீட்டின் வாசலில் சக்கர நாற்காலியில் இருந்தபடி வரவேற்றார்.சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றிருந்தார்.இந்த நண்பர் பட்டாளம் காரணமாக சென்னை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்த போது கோவையில் இருந்து மூன்று லாரிகளில் நிவாரண பொருட்களை சேகரித்து முதலில் அனுப்பி வைத்தவர்.ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு “ஜக்கு’ என்ற வார்த்தை பிரபலம்.

எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் எழுத்து தனி ரகம்.வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சித்தவர்.இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொன்னவர்.தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு “ஆன் லைனில்’ தமிழ் சொல்லிக் கொடுத்தவர்.கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடை பெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்து வந்தவர்.தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ லேப் டாப்,கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவ முடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ…தாராளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஓரு பக்கம் என்று ஒடிக்கொண்டிருந்தவர் இன்று ஒரேயடியாக ஒய்வு எடுத்துவிட்டார்.

உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் கிடந்த படியும்,சக்கர நாற்காலியில் இருந்தபடியும்தான் செய்து வந்தார் என்பதுதான் ஆச்சர்யம்.வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்க வைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டு விட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, பெற்றோர் சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது…தந்தை தனது தொழிலை விட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவரானார். ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்தது .இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக் கொடுக்குமளவு தனது அறிவை பெருக்கிக் கொண்டு இருந்தார்.கம்ப்யூட்டர் மட்டுமின்றி இலக்கியம் அறிவியல் ஆகிய பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலி யில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய் வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்து வந்தார்.இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்பினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்.கோவையில் இளைஞர் அமைப்புகள் எந்த விழா நடத்தினாலும் அதன் சிறப்பு விருந்தனர் பெரும்பாலும் ஜக்கூதான்.இரண்டு புத்தகங்கள் போட்டு உள்ளார், எள்ளலும் துள்ளலும் கலந்த இவரது எழுத்துக்களால் புத்தக உலகமும் இவரைப் பாராட்டியது.இவரது ஆற்றலை பற்றிக் கேள்விப்பட்ட மதுரா டிராவல்ஸ் வீ.கே.டி.பாலன் போனிலேயே இவரது அறிவை சோதித்து விட்டு தனது நிறுவனத்தின் வெப் டிசைனராக பணியில் அமர்த்தினார் வீட்டிலிருந்தால் வேலை வெளியில் போனால் சேவை என்று ஜக்குவின் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.

ஜக்கு ஆஸ்பத்திரியில் இருந்த போது அவரை பார்ப்பதற்காக கலெக்டர் உள்ளீட்ட பல்வேறு பிரமுகர்களும் விஐபிக்களும் வந்திருந்தனர் எப்படியும் ஜக்கூ பிழைக்கவேண்டும் என்று பிரார்த்தித்தனர். ஆனால் ஜக்குவை காய்ச்சல் இவரை திரும்ப பார்க்கமுடியாத இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.ஒரு மனிதருக்கு இவ்வளவு நண்பர்களா என்று வியக்கவைக்கும் அளவிற்கு ஜக்கூவிற்கு நண்பர்கள் மிக அதிகம், அதிலும் ‘ அண்ணா’ என்று வாஞ்சையுடன் அவரால் அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் விம்முகிறது. தம்பி ஜக்கு உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

-எல்.முருகராஜ்

error: Content is protected !!