`திருமணம் (சில திருத்தங்களுடன்)’ – இசை வெளியீட்டு விழாத் துளிகள்!!

`திருமணம் (சில திருத்தங்களுடன்)’ – இசை வெளியீட்டு விழாத் துளிகள்!!

இயக்குநர் சேரனின் அடுத்த படைப்பு `திருமணம் (சில திருத்தங்களுடன்)’ . இப்படத்தில் குணச் சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை யில் நடந்தது. விழா நடந்த தியேட்டர் முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். வாசலில் அழகு பெண்கள் பன்னீர் தெளித்து சந்தனக் கிண்ணம் நீட்டினார்கள்.அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி நர்ந்தனமாடி கொண்டிருந்தது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார் கள். ஆடியோ விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் ஏதோ திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ். ரவிக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து எனப் பல முன்னணி கலைஞர்கள் இசையை வெளியிட, மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அருண்ராஜா காமராஜ் உட்படப் பல இளம் இயக்குநர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “இயக்குனர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுகிறவர் அல்ல, செதுக்குகிறவர். சேரனுக்கு நான் எழுதிய பாட்டுக்கே ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளிவட்ட சாலையில் நானும், என் நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஒரு பெரியவர், “நீங்கள்தானே வைரமுத்து” என்று கேட்டார். ‘ஆம் என்றேன்’. நீங்கள் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன். “நான் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழன். என் பூர்வீகம் எனக்கு தெரியாது. இந்த பாட்டுக்குள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் மண்ணெடுத்திருக்கிறீர்கள். பாட்டை கேட்கிற போதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் பூர்வீகமாய் இருக்குமோ என்று அடிக்கடி விரும்பி கேட்கிறேன்” என்றார். அப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல. சிங்கப்பூரின் அன்றைய ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் தான்.

அவர் மறைந்தபோது, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். அப்போது, சிங்கப்பூரின் சீன அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார். “இப்போது, மறைந்த ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒலிபரப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” என்றார். உடனே அந்த மேடையில், “தஞ்சாவூரு மண்ணெடுத்து” பாடல் ஒலிபரப்பானது. இப்படி ஒரு வரலாற்று சிறப்பு சேரன் உருவாக்கிய ‘பொற்காலம்’ படத்தில், தேவா இசையில் நான் எழுதிய பாடலுக்கு கிடைத்தது. இந்த ஒரு தடம் போதும். சேரன் இயக்குனராக வந்து சாதித்ததற்கு…

தற்போது ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ‘திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா? அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.” என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “சேரனை என்னுடைய உதவி இயக்குநர் எனக் கூறுவதே பெருமையாக இருக்கிறது..`ஒரு ஆப்பிரிக்கத் தம்பதிக்கு நல்ல சிவப்பாக ஒரு குழந்தை பிறந்தால், `இது உங்க கொழந்ததானா’ என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். அது போலத்தான் பலர் கேட்கும் கேள்வி, `என்னது, சேரன் உங்ககிட்ட அஸிஸ்டண்டா இருந்தாரா?!’ என்பது. நாங்கள் இருவரும் எடுக்கும் படங்கள் வெவ்வேறு வகையானவை. நான் கமர்ஷியல் படங்கள் எடுப்பவன். சேரன் கிளாஸிக் படங்கள் எடுப்பவன். அப்படிப்பட்ட சேரன் என் உதவியாளன் எனக் கூறுவதே எனக்குப் பெருமை. இத்தனை தடைகளுக்குப் பிறகு அவன் ஒரு படம் எடுப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி.” எனச் சொல்லி நெகிழ்ந்தார்.

அவரைத் தொடர்ந்த இயக்குநர் மகேந்திரன்,“சேரனைப் பற்றி நான் நினைக்காத நாளே இல்லை. இத்தனை காலம் ஒரு படம் எடுக்க முடியாத சூழ்நிலைகளில் இருந்தவர், எப்படியாவது மீண்டும் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பல நாள்களாக என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது” என உணர்வுபூர்வமாகப் பேசினார்.

நடிகர் தம்பி ராமையா, “இவ்வளவு நாள்கள் நாம் ஒரு தங்கக் கலசத்தைத் தொலைத்துவிட்டோம். இப்போது அது கிடைத்துள்ளது” என்ற சொற்களை மேற்கோள் காட்டி, “தொலைத்த சேரனை மீண்டும் இப்போது கண்டுபிடித்துவிட்டது, இந்தப் படம்.” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும் போது,“உணர்வுகளைக் கடத்துவதில் சேரன் ஒரு பெரும் கலைஞன். இப்படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது, திருமணத்தில் சம்பந்தப்படும் இரு வீட்டாருக்கும் இடையில் பொருளாதார அடிப்படையில் நடக்கும் சில சண்டை சச்சரவுகளும், அதைத் தவிர்ப்பதுக்கான திருத்தங்களையும் பகிரும் ஒரு படமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட கதைக்களம் இருந்தால், சேரன் கண்டிப்பாகப் பல உணர்வுகளைப் பதிவு செய்திருப்பான் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.” என்றார்.

மேலும், விழாவின் துவக்கத்தில் திரையிடப்பட்ட படத்தின் பாடல் ஒன்றைப் பாராட்டி, “அந்தப் பாடலில் பார்ப்பதுபோல படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களுக்குள்ளும் ஒருவகையான இசை இணைந்தே இருக்கிறது. இதுவே மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. படைக்கப்பட்ட அனைத்துப் பாத்திரங்களும் கலைநயமிக்கதாக இருப்பதே ஒரு புது முயற்சிதான்” என்றார்.


முத்தாய்ப்பாக பேச வந்த இயக்குநர் சேரன், “பாரதிராஜா சார் சொன்னதுபோல, இத் திரைப்படம் பொருளாதாரச் சூழ்நிலைகள் எப்படித் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப்பற்றி அலசும் ஒரு படைப்பாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர். “மூத்தவர்களை எப்போதுமே மதிக்கவேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பாரதிராஜா இல்லையென்றால், மகேந்திரன் இல்லை யென்றால், பாலசந்தர் இல்லையென்றால், பீம்சிங் இல்லையென்றால், பந்துலு இல்லை யென்றால், பாலுமகேந்திரா இல்லையென்றால், கே.பாக்யராஜ் இல்லையென்றால் கே.எஸ். ரவிகுமார் இல்லையென்றால், இன்றைக்கு சினிமா உலகமே இல்லை. இவர்களிடம் இருந்துதான் எத்தனையோ இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களை நாம் மதித்து மரியாதை செய்யவேண்டும்.

மூத்தவர்களை மதிப்பதற்கான தருணங்களும் நிகழ்வுகளும் குறைந்துகொண்டே வருகின்றன. அதேபோல் இளையவர்களை, புதியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த மேடையில் மூத்தவர்களான இயக்குநர்களை அமர வைத்திருக்கிறேன். அதேபோல், கடந்த ஆண்டு நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களாக ஆறு பேரை இங்கு அமரச் செய்திருக்கிறேன்.

பணம் பண்ணுவதற்குத்தான் சினிமா என்று நினைக்காமல், சமூகத்துக்காக, மக்களுக்காக, நல்ல கருத்துகளுக்காக படம் பண்ணிய இளம் இயக்குநர்கள் இவர்கள். ‘கனா’, ‘அறம்’, ‘அடங்க மறு’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘டூலெட்’, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர்கள், நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.

கதையிலும் கதையைச் சொன்ன விதத்திலும் பிரச்சினைகளை அலசிய நேர்மையிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

‘கனா’ படம் பார்த்துவிட்டு மிரண்டு போனேன். எல்லோரும் விளையாட்டைப் பற்றிய கதை. பெண்கள் விளையாடுவதைச் சொல்லும் படம் என்று சொன்னார்கள். ஆனால் அது விவசாயத்தைச் சொன்ன படம்.

11 பேர் கிரிக்கெட் விளையாட இருக்கிறீர்கள். அதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. கமிட்டி இருக்கிறது. இவ்வளவு விளம்பரங்கள் குவிகின்றன. ஆனால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மட்டும் இப்படி யோசிக்கிறீர்களே என்று முகத்தில் அறைந்து சொல்லியிருந்தார் இயக்குநர்.

அதேபோல், ராக்கெட் விடுகிறீர்கள். அதற்குப் பணம் ஒதுக்குகிறீர்கள். ஆனால் குழியில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை. ஏழைகளைப் பற்றியே யோசிக்காமல், பணக்காரர்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள் என்பதை ‘அறம்’ படத்தில் சொன்னார் இயக்குநர் கோபி நயினார்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’யின் இயக்குநரும் ‘டூலெட்’ படத்தின் இயக்குநரும் அப்படித்தான் உண்மையை உரக்கச் சொன்னார்கள். இதில் ‘டூலெட்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.

‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்துவிட்டு ரொம்பவே மகிழ்ந்தேன். எப்படியொரு படம் அது? சாதி வித்தியாசமில்லாமல் எல்லோரும் கொண்டாடினார்கள். சாதியை, சாதிக் கொடுமையை இதைவிட வேறு என்ன சொல்லி விளக்கிவிட முடியும்?

இன்னமும் சாதி இருக்கிறது. சாதி வெறி இருக்கிறது. ஆணவக் கொலைகள் நடக்கின்றன. சாதியே இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் என் முதல் படமான ’பாரதி கண்ணம்மா’வின் கதையை, சாதிக்கு எதிரான களமாக அமைத்திருந்தேன்.

இந்த நம்பிக்கைக்கு உரிய இயக்குநர்களின் வரிசையில் ‘அடங்க மறு’ படத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். படத்தில் ஹீரோவைத் தூக்கிப் பிடிக்கிற விஷயங்கள் நிறையவே இருக்கும். ஆனால் ஹீரோயிஸம் என்பதே இருக்காது. இந்தப் படத்தை எந்தக் காட்சியிலும் ஹீரோயிஸ படமாகவே மாற்றவே இல்லை.

ஹீரோ ஜெயம் ரவி ஜெயித்துக்கொண்டே இருப்பார். ஆனால் ஹீரோயிஸம் துளி கூட இருக்காது. கதையும் திரைக்கதையும் அப்படி அழகாக, அருமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆறு இயக்குநர்களும் நம்பிக்கைக்கு உரிய இயக்குநர்கள். இன்னும் இன்னும் சாதிப்பார்கள். நல்ல நல்ல படங்களைக் கொடுப்பார்கள் என்பது உறுதி”.

” என்றார், சேரன்.

error: Content is protected !!