ஆல் இன் ஒன் எமெர்ஜென்சி நம்பர் 112: அமலுக்கு வந்துடுச்சு!
நம் நாட்டில் அவசர போலீசுக்கு போன் பண்ண நம்பர் என்ன? என்று கேட்டவுடன் டக் என்று 100 என்று பதில் சொல்லும் ஆட்களிடம் ஃபயர் சர்வீஸ் நம்பர் அல்லது உமன்ஸ் கேர் நம்பர் என்ன என்ரு கேட்டால் பலரும் சரியான பதில் சொல்வதில்லை. இதைக் கருத்தில் கொண்டு சகலவித அவசர உதவிகளுக்கும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஒரே எண்ணாக 112 எண் இன்று அறிமுகப் படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னரே நம் ஆந்தை ரிப்போர்ட்டர் இணைய தளத்தில் இந்த அவசர உதவி குறிப்பிட்டிருந்தது போல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்ல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி ஆம்புலன்ஸ், காவல்துறை, தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் 112 என்ற ஒரே தொலைபேசி எண் இன்று முதல் அறிமுகமாகிறது.
அதாவது முன்னரே சொன்னது போல்பொதுவாக காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்துறைக்கு 101, சுகாதாரத்துறைக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்பன உட்பட பல்வேறு சேவைகளுக்கு பல்வேறு உதவி அழைப்பு எண்கள் இருந்தன. இந்த நிலையில், அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் இந்த அவசர உதவி எண் வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ‘112 இந்தியா’ என்ற மொபைல் செயலியையும் உள்துறை அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியில் ஆபத்துக்குள்ளாகும் பெண்கள், அருகாமையில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் வசதியும் இடம் பெற்றுள்ளது. 112 ஹெல்ப் லைனின் பதற்ற கால அவசர அழைப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது