ஸ்மார்ட் போன் விலை 999 மட்டுமே! – ரிலையன்ஸ் அதிரடி
ஸ்மார்ட்போன் சந்தை படு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் சாம்சங், சோனி, மோட்டோரோலா, என பல முன்னணி நிறுவனங்களும் வாரந்தோறும் புதிய கருவிகளை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் உலகிலேயே மிக விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர் களுடன் மட்டும் வெளிவருகிறது. மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும். பிராசசர் களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம் தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது. இதற்காக சீனா மற்றும் தைவானில் உள்ள முன்னணி பிராசசர் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
வரும் டிசம்பர் 28-ந்தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் கூறவில்லை. டேட்டா வைண்ட் நிறுவனம் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.