ஸ்பைடர் தமிழிலும் தயாரானது ஏன் தெரியுமா? – மகேஷ் பாபு விளக்கம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஸ்பைடர்’. என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள்.

 விழாவில் பேசிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறேன். முதல் நாள் தான் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்த மாதிரி இருந்தது. இரண்டாவது நாளில் இருந்தே சகஜமாக தமிழில் என்னுடன் பேச தொடங்கி விட்டார். சமூக அக்கறை உடைய படங்களை எப்போதும் கொடுத்து வரும் முருகதாஸ் சார் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தேவை. கல்விக்காக ஒரு பெண் சாகும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. நீங்கள் இந்தி சினிமாவுக்கு செல்லாமல், தமிழ்நாட்டுக்கு வாங்க, நல்ல கருத்துள்ள படங்களை தாருங்கள் என்றார்.
கவிஞர் மதன் கார்க்கி பேசிய போது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் நான் அறிமுகம் ஆனேன். இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் படத்தில் நானும் பங்கு பெறுவது மகிழ்ச்சி. ஒரு பாடலில் ‘பஞ்ச் டயலாக் பேசாமலே மாஸ் அள்ளும் ராசா’ என ஒரு வரி எழுதியிருந்தேன். அது மகேஷ்பாபுவுக்கு பொருந்தும் பாடல் வரி. இப்படத்தில் ஒரு தெலுங்கு பாடலையும் எழுதியிருந்தேன். கலைக்கு மொழி தேவையில்லை. எந்த மொழியாக இருந்தாலும் மகேஷ்பாபுவை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார் மதன் கார்க்கி.
“கந்தசாமி படத்தில் மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணா நடித்து கொடுத்திருந்தார். அவரது மகன் மகேஷ்பாபு இப்போது தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மகேஷ்பாபு நன்றாக தமிழ் பேசுவார், அவரையே தமிழுக்கும் டப் செய்ய சொல்லுங்கள். இந்த படத்தை நான் தயாரிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் 4 மாஸ் ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு போட்டியாக மகேஷ்பாபு நிச்சயம் வருவார்” என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
 “நான் கிருஷ்ணாவுக்கும் ரசிகன், அவரது மகன் மகேஷ்பாபுவுக்கும் ரசிகன். 15 வருடங்களுக்கு முன்பு அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தது, தெலுங்கு தெரியாததால் தவற விட்டு விட்டேன் என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் விக்ரமன்.
இயக்குநர் கேயார், “சின்ன வயதில் இருந்தே மகேஷ்பாபுவை எனக்கு தெரியும். ரஜினியின் தமிழ் மாதிரி மகேஷ்பாபுவின் தமிழ் ஒரு ட்ரெண்டை உருவாக்கும். தோல்விப்படங்களையே கொடுக்காத முருகதாஸ் இந்த படத்திலும் வெற்றியை மட்டுமே கொடுப்பார்” என்றார்
“நான் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகன். முதல் நாள் முதல் காட்சியே எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். இந்த தடவை அதிர்ஷ்டவசமாக தமிழிலேயே பார்க்க போகிறேன். 2008ல் யுடிவி மூலம் மகேஷ்பாபுவை இயக்க ஒரு வாய்ப்பு வந்து, சில காரணங்களால் நழுவியது. அந்த படம் தான் நான் தமிழில் இயக்கிய மதராசபட்டிணம்” என்றார் இயக்குனர் விஜய்.
தயாரிப்பளர் ராஜூ மஹாலிங்கம் தன் பேச்சின் போது “ சினிமாவை எப்போதும் ஆந்திர ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 10 வருடங்களுக்கு முன்பு பிரபுதேவா, ஒரு தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் பண்றேன்னு சொல்லி, எனக்கு போக்கிரி படத்தை காட்டினார். அதிலிருந்து மகேஷ்பாபுவின் தீவிர ரசிகன் ஆகி விட்டேன். ரஜினி சாரிடம் விழாவுக்கு அழைக்க சென்றிருந்தேன், அப்போது அவர் மகேஷ்பாபு சென்னையில் வளர்ந்ததையும், அப்போது குண்டாக இருந்ததையும், இப்போது மிகவும் ஹேண்ட்சமாக மாறி விட்டதை பற்றியும் என்னிடம் பேசினார். சூப்பர் ஸ்டாரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஹீரோ தான் மகேஷ்பாபு என்றார் .
இயக்குநரும்  நடிகருமான எஸ் ஜே சூர்யா பேசும் போது, “இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்கள் இவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மகேஷ்பாபு படம், அவர் தமிழில் அறிமுகமாகும் படம். அதனாலேயே வில்லனாக நடிக்கவும் ஒப்புக் கொண்டேன். முழுக்க கதையை மையமாக வைத்து நடித்த ரஜினி சாருக்கு எப்படி சந்திரமுகி மெகா வெற்றியை பெற்றதோ, அந்த மாதிரி மகேஷ்பாபுவுக்கு இந்த ஸ்பைடர் அமையும். மகேஷ்பாபு ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கிறார். அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு ஹாலிவுட் படம் தான் இது. 11 வருடங்களுக்கு முன்பு இருந்த அதே மரியாதை, அன்பு கொஞ்சமும் குறையாமல் மகேஷ்பாபுவிடம் அப்படியே இருக்கிறது. தமிழ் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஒரு படமாக தமிழிலும் இது அமையும். என்னுடைய லட்சியமே 3 மொழிகளில் நல்ல மார்க்கெட் இருக்கும் ஒரு ஹீரோ ஆவது தான். இந்த ஸ்பைடர் அதற்கு முதல் படி” என்றார்
 “மகேஷ்பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறோம், தமிழ் மக்கள் நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வார்கள். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ஸ்பைடர். ரிலீஸ் நேரத்தில் ஆந்திராவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். கல்லூரி நாட்களில் மகேஷ்பாபுவை பார்த்திருக்கிறேன், கொஞ்சம் குண்டாக இருப்பார். முருகதாஸ் சார் நீங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை, எங்களை விட்டு தெலுங்கு, இந்திக்கு போகாதீர்கள், தமிழ் சினிமா பக்கம் வாங்க எனப் பேசினார் நடிகர் விஷால்.
“கஜினி படத்துக்கு தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எனக்கு, சூரியாவுக்கு, முருகதாஸுக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்த படம் துப்பாக்கியை விட 10 மடங்கு பெருசா இருக்கும். தியேட்டர் தெறிக்கும். மகேஷ்பாபுவின் ராஜகுமாரடு படத்திலேயே மணிஷர்மாவின் கீபோர்ட் பிளேயராக பணிபுரிந்திருக்கிறேன் என தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்” இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “கார்த்திக், சூரியா, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு என செயிண்ட் பீட்ஸ் பள்ளியில் படித்த எல்லோருமே சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார்கள். மகேஷ்பாபுவும் எங்கள்  பள்ளியின் மாணவர் தான் என்பதில்   எனக்கு மகிழ்ச்சி. சுனாமி வருவதற்கு முன்பு கடல் அமைதியாக தான் இருக்கும். அந்த மாதிரி 27ஆம் தேதி ஒரு சுனாமி வரப்போகிறது” என்றார்
அடுத்து பேசிய ஸ்பைடர் பட இயக்குநர், “10 வருடங்களுக்கு முன்பு விஜயவாடாவில் ஒக்கடு படத்தை பார்த்தேன், ரிலீஸ் ஆகி 3 வாரம் ஆன படத்தை கூட ஒரு திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் போக்கிரி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் துப்பாக்கி படத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன். மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் முழுக்க, ஒவ்வொரு காட்சியையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தோம். மகேஷ்பாபு எனக்கும், உடன் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார். அமீர் கானுக்கு அப்புறம், படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்கணும்னா சொல்லுங்க, தேதி ஒதுக்கி தருகிறேன் என சொன்ன ஹீரோன்னா அது மகேஷ்பாபு தான். இந்த படத்தின் வெற்றி நிச்சயம் மகேஷ்பாபுவுக்கு தான் போய்ச் சேரும்.
ஹாரீஸ் ஜெயராஜ் திரைக்கதை தெரிஞ்ச ஒரு இசையமைப்பாளர். இந்த படத்தின் பின்னணி இசை மிரட்டும். ஹீரோவாக நல்ல வரவேற்பை பெற்றிருந்த எஸ்ஜே சூர்யா, இதில் வில்லனாக நடிக்க கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி நடிக்க ஓகே சொன்னார். இந்த படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் 2000 பேர் நடிச்சிருக்காங்க. யாருக்கும் எந்த பாதிப்பும் வராத அளவுக்கு அதை வடிவமைத்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன். மகேஷ்பாபு நானே பயப்படும் அளவுக்கு ரிஸ்க் எடுத்து அந்த சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். கலைக்கு மொழி, எல்லை கிடையாது. சமீபத்திய உதாரணம் சீனாவில் 1000 கோடி வசூல் செய்த டங்கல். இப்போ புதுசு புதுசா வர ஹீரோக்கள் கூட ரெண்டே படங்கள்ல ஏதேதோ பட்டத்தை போட்டுகிறாங்க. ஆனால் மகேஷ்பாபுவுக்கு பட்டம் போட்டுக்கிறதில் எல்லாம் ஆர்வம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்று முகம் படத்தில் மகேஷ்பாபு நடித்தால் சிறப்பாக இருக்கும்” என்றார் இயக்குனர் முருகதாஸ்.
முத்தாய்ப்பாக பேசிய நாயகன் மகேஷ் பாப்பு, “திரையுலகிற்கு வந்து 18 வருடங்கள் கழித்து, இன்று எனக்கு முதல் படம் நடிப்பது போன்ற உணர்வு கிடைத்துள்ளது. நானும் முருகதாஸும் ஒரு படத்தில் இணைய 10 வருடங்களாக முயற்சித்து வருகிறோம். அது இது போல ஒரு பிரமாண்ட படத்தில் நிறைவேறியுள்ளது. 120 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். அதை தயாரிக்க எங்கள் தயாரிப்பளர்கள் முன் வந்தது மிகப்பெரிய விஷயம். இரு மொழிகளில் வெளியானால் தான் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். அதனால் தான் தமிழிலும் படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படம் ரொம்பவே கஷ்டமான படம். பின்னணி இசைக்காக அரிதாக தான் படங்கள் பேசப்படும். அந்த வகையில் ஹாரீஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் வல்லவர். எஸ் ஜே சூர்யா 12 வருடங்களுக்கு முன்பு என்னை இயக்கினார். இன்று என்னோடு சேர்ந்து நடித்திருக்கிறார். எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனாலும் துப்பாக்கி படத்தை பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். இப்போது அதன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி” என்றார் நாயகன் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு.
விழாவில் நடிகர் ரமேஷ்கண்ணா, தயாரிப்பாளர்கள் ஏஎம் ரத்னம், ஆர்பி சௌத்ரி,  ஸ்பைடர் தயாரிப்பாளர்கள் மது, பிரசாத், ஐங்கரன் கருணாமூர்த்தி, தென்னிந்திய திரை பட வர்த்தக சபை தலைவர் எல் சுரேஷ்,  விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி தெலுங்கு பாடலாசிரியர் ராம ஜோகைய சாஸ்திரி, சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மேடையில் பேசிய நாயகி ரகுல் ப்ரீத் சிங், ஒரு ரசிகரை மேடைக்கு அழைத்து அவருடன் ஜோடியாக நடனமாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
error: Content is protected !!