மோடி அரசின் மீதான நம்பிக்கை – சர்வதேச அளவில் மூன்றாமிடம்!
நம் பிரதமரையும், பாஜகவையும் ஒட்டு மொத்த இந்தியாவில் பலர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்ற ரீதியிலான சர்வே ரிசல்ட் தொடர்ந்து வெளியாவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் உலகின் நம்பத்தகுந்த அரசுகள் பட்டியலில் மோடி தலைமையிலான பா.ஜ. ஆட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, உலகளாவிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாம். அதில் நம்பத்தகுந்த அரசாங்கம் என்ற பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர் லாந்தும், 2வது இடத்தில் இந்தோனேசியாவும் இடம் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.
அதாவ்து இந்திய அரசின் நிலைப்பாடு பற்றி இந்தியாவில் சர்வே நடத்தியதாகவும் இதில் 74 சதவீத இந்தியர்கள், மோடி ஆட்சியின் மீது நம்பிக்கை தெரிவித்ததாகவும், சமீபத்திய ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, வரி சீர்திருத்தம் ஆகியவை காரணமாகவே மோடி அரசின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று இந்தியர்கள் கூறியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி மத்திய சுகாதார அமைச்சர் நட்டா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். நரேந்திரமோடி தலைமை மற்றும் அவரது அரசின் கொள்கைகள் தான் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது. நமது பிரதமர் தலைமையில்புதிய இந்தியாவை ஒவ்வொரு இந்தியனும் பார்க்கிறான் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தி உள்ளது. இந்தியாவில் தொடரும் பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தங்களால் தான் இந்த உயரிய வளர்ச்சி சாத்தியமானது என்றும் மோடி அரசை பாராட்டி ஒரு அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.