மவுலிவாக்கம் :2-வது பில்டிங்கை இடிக்க பர்மிஷன் குடுங்கய்யா!
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடி குடியிருப்பு 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி மழையின் போது இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து இடிந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடமும் சரியான பாதுகாப்பு இல்லாததால் அதையும் இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கட்டிட உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கட்டிட இடிப்பு சம்பந்தமாக என்ஜினீயர்கள் உள்ளிட்ட அனைத்து சாட்சியங்களிடம் மீண்டும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கட்டிட இடிப்பு சம்பந்தப்பட்ட புகைப்படங் களை நீதிபதிகளிடம் காட்டி ஏற்கனவே இடிந்த கட்டிடத்தின் அஸ்திரவாரத்தை போலவே தான் தற்போது இருக்கும் கட்டிடத்தின் அஸ்திவாரமும் உள்ளது. எனவே மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த கட்டிடத்தை இடிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். இரண்டாவது கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக ஏற்கனவே என்ஜினீயர்கள் உள்ளிட்டோர் விரிவான சோதனை நடத்தி அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழக அரசு இந்த முடிவுக்கு வந்தது. எனவே ஐகோர்ட்டு கூறியதை போல் மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினால் அதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்றார்.
இந்த வழக்கு சம்பந்தமாக பதில் மனுக்களை எதிர்மனுதாரர்கள் 18-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை 18-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.