போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் நம்ம இந்தியா 5-ஆம் இடமாக்கும்
ஒரு நிறுவனம் எக்கச்சக்கமான ஆண்டுகள் பல்வேறு ரிசர்ச் மற்றும் முயற்சி செய்து கஷ்டப்பட்டு கொண்டுவரும் ஒரு தயாரிப்பை மிகச் சாதாரணமாக ஜஸ்ட் லைல் தட் நகல் எடுத்து சந்தைப்படுத்தி சம்பாதித்து விடும் போக்கு உலகமெங்கும் இருக்கிறது. இது போன்ற போலி தயாரிப்பாளர்கள். தவிர பெரிய நிறுவனங்களின் பிராண்ட் பெயரை காப்பியடித்ததுபோல எழுத்துருக்களை முன்பின் மாற்றி சாதாரண தயாரிப்பை சந்தைப்படுத்தும் சாமர்த்தியமும் உலக அளவில் நடந்து வருகிறது. இதில் ஏமாறுவது நுகர்வோர் மட்டுமில்லை.. நிறுவனங்களும்தான். கோடிக்கணக்கில் விளம்பரங்களைச் செய்து தங்களது தயாரிப்புகளுக்கான சந்தையை உருவாக்கினால், போலிகள் அந்த சந்தையில் ராஜநடை போடுகின்றன என்கின்றன உலக அளவிலான ஆய்வுகள்.
இதனால் உண்மையான நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்படுவதுடன், நுகர்வோருக்கும் தரமான பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. போலி பொருட்களை பயன்படுத்தும் நுகர்வோருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. இந்த வகையிலான போலிகளின் உலகம் சுமார் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது என்கின்றன வர்த்தக அமைப்புகள். சர்வதேச பொருளாதார மேம்பாட்டுக் கழகம் 2007 ம் ஆண்டு அறிக்கையில் இந்த கள்ளச் சந்தையின் மதிப்பு 25,000 கோடி டாலர்கள் என்று கூறியுள்ளது. சர்வதேச அளவிலான சட்டத்துக்கு விரோத வர்த்தகமாக இதை வரையறுக்கிறது இந்த அமைப்பு.
உலக அளவில் போலி பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் சர்வதேச வர்த்தகர்கள் சபை இந்த போலி சந்தையால் உலக அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது. டிஜிட்டல் பொருள்களில் போலிகள் உருவாக்கத்தால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கோடிக் கணக்கில் இழப்புகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் இந்தியா 5-ஆம் இடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா முதலிடத்தில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு மேற்கொண்டது. அதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து தயாரான போலி பொருள்கள் 3.3. சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் போலி தயாரிப்புகள் முறையே 1.9, 1.6 சதவீதம் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்டதில் இந்தியாவில் தயாரான பொருள்கள் 1.2 சதவீதம் இருந்தன.