நாட்டிலேயே மிக சிறிய அளவிலான குடும்பங்கள்! தமிழகத்தின் நிலைமை!!
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாறு 1872-ஆம் ஆண்டு தொடங்குகிறது. அப்போதுதான் முதன்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அக்கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் நடத்தப்படவில்லை. எனவே, அது முறையான கணக்கெடுப்பாக கருதப் படவில்லை. ஆனால், 1881-ஆம் ஆண்டில் தொடங்கி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எந்தவித இடை யூறும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடும்ப அமைப்பு குறித்த கணக்கெடுப்பு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் மிக சிறிய அளவிலான குடும்பங்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது.
இங்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்கு ஒரு குடும்பத்துக்கு 3.9 உறுப்பினர்கள் என்ற அளவில் தான் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் ஒரு குடும்பத்தில் சராசரியாக 4.2 உறுப்பினர்கள் உள்ளனர்.தமிழ்நாட்டில் மிக சிறிய குடும்பங்களாக மாறியதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பிறப்பு விகிதம் குறைவே மிக முக்கிய காரணமாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இங்கு கிராம புறங்கள் குறைந்து நகர் புறங்கள் பெருகுவதும் மற்றொரு காரணமாகும்.
அதே நேரத்தில் உத்தர பிரதேசத்தில் தான் அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்கள் உள்ளன. அங்கு ஒரு குடும்பத்தில் சராசரியாக 6 பேர் வசிக்கின்றனர்.அதற்கு அடுத்தபடியாக ஜம்மு–காஷ்மீரில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 5.8 பேர் உள்ளனர். பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நகர்புறங்களை விட கிராமங்களில் மக்கள் தொகை அதிகம் உள்ளது.