தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை ரூ.30 ஆயிரம் கோடி !
நம் நாட்டில் முதல் மக்களவை தேர்தல் 1952ம் ஆண்டு நடந்த போது ஒரு தனி நபருக்கு 60 காசுகள் செலவானதாகவும் அது தற்போது 20 மடங்காக அதிகரித்து கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 12 ரூபாயானது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் இணையதளத்தில் ’1952ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கான மொத்த செலவு 10.45 கோடியாக இருந்தது அதுவே 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் 846.67 கோடி ரூபாய் அரசுக்கு செலவானதாக கூறப்பட்டுள்ள நிலையில் .தேர்தலில் ரூ.30,500 கோடி வரை வேட்பாளர்களால் செலவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் செலவழிக்கப்படும் தொகைக்கு அடுத்தபடியாக, பெருமளவில் செலவழிக்கப்படுவது இந்திய தேர்தலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு குறித்து, ஊடக கல்விக்கான மையம் புள்ளிவிவரங்களை தயாரித்துள்ளது. இதில் ”கடந்த 2009ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு செலவழிக்கப்பட்டதாக தெரியவந்தது. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இந்த செலவு ரூ.30,500 கோடி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த தேர்தலை விட, இத்தேர்தலில் செலவு 3 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.2012ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், ஆதரவு குழுக்கள் ஆகியவற்றின் மூலம் ரூ.42,700 கோடி செலவு செய்யப்பட்டது. உலகிலேயே தேர்தலில் அதிகம் செலவு செய்யப்படுவது, அமெரிக்க அதிபர் தேர்தலில்தான்.இதற்கு அடுத்தபடியாக, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தலில் அதிகம் செலவழிக்கப்படுகிறது.”என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேர்தல் செலவினத்தால் இன்னொரு நன்மையும் நாட்டுக்கு உள்ளது. அது, நாட்டின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமையும் என்பதுதான். அதாவது பிரசாரத்திற்காக அதிகளவில் பணம் செலவழிக்கப்படும், மறைமுகமாக, நேரடியாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பணப்புழக்கம் அதிகரிக்கிறது. இது பொருளாதாரத்துக்கு பலத்தை சேர்க்கும். ஆனால், இது தற்காலிக செயல்பாடுதான் என்பதால், இதை முழுமையாக நம்பி விட முடியாது என்றும் இந்த தேர்தலில், விளம்பரத் துறையினருக்கு ரூ.4,900 கோடி அளவுக்கு ஆர்டர்கள் குவியும் என்றாலும்.வழக்கமாக தேர்தல் செலவின் மூலம் 0.2 லிருந்து 0.3 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதாக தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பிரணாப் சென் தெரிவித்துள்ளார்.