சர்வதேச அமைப்பான ‘ஐகேன்’னுக்கு நோபல் பரிசு!
2017 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான ”ஐகேன்”னுக்கு வழங்கப்பட்டது.
அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007ஆம் ஆண்டு அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச அமைப்பு (International Campaign to Abolish Nuclear Weapons – ICAN) உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் இணைந்து உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, ஏராளமான அணு ஆயுதங்களை குவித்து வைத்திருந்த ஈரான் நாட்டை அணுஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையொப்பமிட்டதிலும், பிற நாடுகளில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்ததிலும் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இது மட்டுமல்லாமல் வடகொரியாவின் அணு ஆயுத வெறிக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்ததிலும் இந்த அமைப்பின் பணி முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ‘ஐகேன்’ அமைப்பு தேர்வாகியுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் இதற்கான அறிவிப்பை அந்நாட்டு நோபல் கமிட்டியின் தலைவர் பெரிட் ரீய்ஸ் ஆண்டர்சன் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தார். மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் அணுஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்க பல்வேறு ஒப்பந்தங்களை கொண்டுவர உறுதுணையாக இருந்ததற்காகவும் ‘ஐகேன்’ அமைப்புக்கு இந்த பரிசு அளிக்கப்படுவதாக பெரிட் ரீய்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அமைதிக்கான நோபல் பரிசையும், பாராட்டு சான்றிதழையும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் மற்றும் பிரதிநிதி செட்ஸுக்கோ துர்லோ ஆகியோரிடம் வழங்கப்பட்டன.முன்னதாக, ஏற்புரையாற்றிய பீட்ரைஸ் ஃபிஹ்ன், வடகொரியாவில் நிலவிவரும் மிக மோசமான அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக கவலை தெரிவித்தார்.