கொல்லம் : கோயில் திருவிழா பட்டாசு வெடித்தத்தில் 102 பேர் பலி
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள புட்டிங்கல் கோயில் திருவிழா நடந்தது. இன்று (10 ம் தேதி )அதிகாலை 3 மணியளவில் பட்டாசு கொளுத்தப்பட்டது. கண்ணை கவரும் விதமாகவும், காதை பிளக்கும் வகையில் பெரும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நேரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீ பற்றியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கோயில் சுற்றி அமைத்திருந்த கூடாரங்களில் தீ பிடித்தது. கோயில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்தனர். விழாவில் கூடியிருந்த பக்தர்கள் பலர் உடல் கருகி இறந்தனர். இதைடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.300 க்கும் மேற்பட்டோர் திருவனந்தபுரம், மற்றும் கொச்சின் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு முழு உதவி செய்யும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்டு படையினர் கொல்லம் விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் காயத்தில் சிக்கியவர்களை மீட்க முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார். காயமுற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேலும் விடுப்பில் சென்ற அரசு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வருமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கோயில் பட்டாசு விபத்து சம்பவம் குறித்து அறிந்த நான் மிக்க துயரப்பட்டேன். இது எனது இதயத்தை உலுக்கி விட்டது. இந்த துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை .மேலும் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு தரப்பில் ரூ. 2 லட்சம், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்கு காரணம் என்ன ? கோயில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அரசு தரப்பில் கோயில் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாத பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும், மேலும் முறையான அனுமதி ஏதும் பெறவில்லை என்றும், பட்டாசு கொளுத்தப்பட்ட இடம் மிக குறுகியதாக இருந்ததாக வும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.