கத்தோலிக்க கிறிஸ்தவ திருப்பலி தமிழ் மொழி புத்தகத்திற்கு தடை
சென்னை 4–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர் தாக்கல் செய்த மனுவில் ‘‘கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜை லத்தீன் மொழியில் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை 15–ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1968–ம் ஆண்டு போப் ஆண்டவர் லத்தீன் மொழியில் உள்ள திருப்பலி புத்தகத்தை பல்வேறு நாடுகளில் பேசப்படும் உள்ளூர் வட்டார மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ள அனுமதி அளித்தார்.
அதன்படி 1977–ம் ஆண்டு தமிழகத்தில் திருப்பலி புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்கு போப் ஆண்டவரும் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்நிலையில் இப்புத்தகத்தில் சில வாசகங்கள் மற்றும் வார்த்தைகள் திருத்தி அமைக்கப்பட்டு 1993–ம் ஆண்டு புதிய புத்தகத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த திருத்தி அமைக்கப்பட்ட புத்தகத்துக்கு போப் ஆண்டவர் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் அடிப்படையில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி நடந்து வருகிறது. எனவே அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாமல் திருத்தி அமைக்கப்பட்ட இந்த திருப்பலி புத்தகத்தை கத்தோலிக்க தேவாலயங்களில் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும்.திருத்தி அமைக்கப்பட்ட இப்புத்தகம் கத்தோலிக்க திருச்சபை சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும்’’.என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 1995–ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.சந்திரசேகர் பிறப்பித்துள்ள தீர்ப்பில்,”‘‘1993–ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட திருப்பலி தமிழ் மொழி புத்தகத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. மேலும் பல வாசகங்கள், வார்த்தைகள் முறையாக மொழி பெயர்க்கப்படவில்லை.
எனவே, திருத்தி அமைக்கப்பட்ட இந்த புத்தகத்தை திருப்பலி பூஜைக்கு பயன் படுத்த கூடாது. இந்த புத்தகம் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை சட்டத்துக்கு எதிரானது. இப்புத்தகம் திருத்தியமைக்கப்பட்டது செல்லாது’’ என்று கூறியுள்ளார்.