எம்.ஜி.ஆருக்கு 100 வயசு கொண்டாட்டம்!- ஜனவரி 17 அரசு விடுமுறை அறிவிப்பு
அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்தநாள் 17–ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, எம்.ஜி.ஆர். உருவ தபால் தலை வெளியிடவும், நாணையம் வெளியிடவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுமட்டுமின்றி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அவரது பிறந்தநாளையொட்டி ஜனவரி 17-ம்தேதி அரசு பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், அரசு வாரியங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படும். தனியார் நிறுவனங்கள் ஜனவரி 17 ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 17 ம் தேதி பொது விடுமுறை ஆனதால் தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறையாகி விட்டது குறிப்பிடத்தக்கது.