எக்ஸ்கியூஸ் மீ.. இங்கே பேட் பாய்ஸ் இருக்காங்க! – ரயில் பயணத்தில் லேடீஸ் ஹெல்ப் கேட்கலாமே!
விமானப் பணிப்பெண் போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.டெல்லி-ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப் பெண்கள் நியமிக்கப் பட உள்ளனர்.
மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் ரயில் பயணிகளை அந்த பணிப்பெண்கள் வரவேற் பார்கள். மேலும் ரயிலில் தொலைக்காட்சி வசதி மற்றும் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட கேட்டிமேன் எக்ஸ்பிரஸ் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்றெல்லாம் சமீ பத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில் ரயில் பயணத்தின் போது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறி கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்ப்பில், “ரயில் பயணங்களின் போது சில நேரங்களில் தனியாக செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் அசௌகரியமாகவும், பாதுகாப்பு இன்மையும் உணருகின்றனர்.இந்நிலையில் தனியாக பயணிக் கும் பெண்கள், விரும்பினால் வேறு இடத்துக்கு மாறி கொள்ளும் புதிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.
இதன்படி பெண் பயணிகளுக்கு உதவும் வகையில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். தனியாக பயணிக்கும் பெண்கள் 90031 60980 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு உதவி கோரினால், அவர்களுக்கு வேறு இடத்தில் இருக்கை அல்லது படுக்கை வசதி அளிக்கப்படும்.தனியாக பயணிக்கும் பெண்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். உதவி பெற விரும்பும் பெண்கள் தங்களது பெயர் மற்றும் அலைபேசி எண்ணை அளிக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகளின் உரிய ஆய்வுக்குப் பின்னர், உண்மையாகவே அவர்களுக்கு வேறு இடம் தேவைப்படும் பட்சத்தில், உதவி செய்யப்படும்.இதுதவிர பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வே துறையில் 182 உதவி எண் செயல்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.