உடை கட்டுப்பாடு விதியை தளர்த்தியது கர்நாடக அரசு
மகளிர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, அரசு ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாட்டு விதியை, கர்நாடக மாநில அரசு தளர்த்திக் கொண்டது.அரசு ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து, கர்நாடக அரசு பணியாளர் நிர்வாக மேம்பாட்டு துறைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ், கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, ‘ஆண்கள் பேன்ட், சட்டை, குர்தா அணிந்து வரலாம். ஜீன்ஸ், டீ&சட்டைகள் அணியக் கூடாது. பெண்கள் சேலை மற்றும் சுடிதார் போன்ற உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை மட்டுமே அணிய வேண்டும்; கண்ணியக் குறைவா உடைகளை அணியக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் சித்தராமையா சீனா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் திரும்பினார். அவரிடம் அரசு உத்தரவு தொடர்பாக, தங்களது அதிருப்தியை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக அரசு திடீரென தனது உத்தரவின் கடுமையை குறைத்து மறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் ‘அரசு ஊழியர்கள் நாகரிகமான உடை அணிந்து வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அரசு மற்றும் தலைமைச் செயலகத்தின் நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்காத உடைகளை ஊழியர்கள் உடுத்திக்கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது, உத்தரவு என்பதற்கு பதிலாக விருப்பம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை அரசு சற்று தளர்த்திக் கொண்டுள்ளது. ஊழியர்களின் விருப்பத்துக்கே உடை கட்டுப்பாட்டை விட்டுவிட்டது அரசு.