ஆரம்பிக்கப் போறாருய்யா.. அன்னா ஹசாரே (மறுபடியும்) உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போறாருய்யா!
சர்ச்சைக்குரிய நில மசோதா சட்ட விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற மத்திய அரசு விரும்புகிறது என்றாலும் இதற்காக காலவரையின்றி காத்திருக்க போவது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் நில மசோதாவுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார். 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி டெல்லி ராம் லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர் களுடன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 16 மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மசோதா விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகும் சில முதல் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நில மசோதாவை நிறைவேற்ற தற்போது சரியான தருணம் இல்லை என சில முதல் அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திருத்த பல மாநில முதல் அமைச்சர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்க நிலம் தேவைப்படுகிறது. 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை உருவாக்கிய காங்கிரஸ் இப்போது அதனை எதிர்ப்பது ஏன்? முந்தைய அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பல மாநிலங்களால் செயல்படுத்த முடியவில்லை. நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பல மாநில அரசுகள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான 78 வயது அன்னா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர், “நில மசோதாவை கைவிடக்கோரியும், ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்க வற்புறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த உண்ணாவிரதத்தை வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்குகிறேன்.
இந்த இரண்டு பிரச்சினைகள் தொடர்பாகவும் அண்மையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.நமது வீரர்கள், விவசாயிகள் நலனை பாதுகாக்கவேண்டிய நமது பொறுப்பாகும். எனவே அவர்களின் நலனுக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடக் கூடாது, அதை பல்வேறு வழிகளில் உண்மையாக நிறைவேற்றவேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்.ஜனநாயக நாட்டில் அரசாங்கம் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்த்து வைக்கவேண்டும். எனது உண்ணாவிரத போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல”என்று அவர் கூறினார்.