அரை கிலோ துவரம் பருப்பு ரூ.55, ஒரு கிலோ ரூ.110 : நாளை முதல் தமிழக அரசு அங்காடிகளில்!
இந்தியா முழுவதும் திடீரென்று துவரம் பருப்பின் விலை பெருமளவில் உயர்ந்ததைத் தொடர்ந்து மக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து மத்திய அரசிடம் இருந்து முதல் கட்டமாக 500 மெட்ரிக் டன் துவரையை தமிழக அரசு கோரியது. இந்தத் துவரை பெறப்பட்டு, அதை துவரம் பருப்பாக மாற்றும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன.ஒரு கிலோ மற்றும் அரை கிலோ என்று இரண்டு வகை பாக்கெட்டுகளாக துவரம் பருப்பு அடைக்கப்படுகின்றன. அரை கிலோ துவரம் பருப்பு ரூ.55 என்றும், ஒரு கிலோ ரூ.110 என்று நவம்பர் 1-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.
கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் (சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் 91 அங்காடிகளில்) விற்பனை செய்யப்படவுள்ளன.சிந்தாமணி, அமுதம் போன்ற கூட்டுறவு சங்க அங்காடிகள் 71-ம், டி.யு.சி.எஸ். அங்காடிகள் 20-ம் உள்ளன. கூட்டுறவு சங்க அங்காடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. டி.யு.சி.எஸ். அங்காடிகள் முதல் இரண்டு வார ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்.
துவரம் பருப்பு சிறப்பு விற்பனை தொடக்கம் நவம்பர் 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்வதால் அன்று கூட்டுறவுத் துறை நடத்தும் அங்காடிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூட்டுறவுத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். எனவே 91 கடைகளிலும் மக்கள் தங்குதடையில்லாமல் நவம்பர் 1-ந் தேதியன்றே சென்று துவரம் பருப்பை குறைந்த விலையில் வாங்கலாம்.