‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு
தமிழக அரசு சார்பில் அம்மா குடிநீர் என்ற பெயரில் மினரல் வாட்டர் பாட்டில் ஒரு லிட்டர் ரூ.10க்கு விற்கப்படுகிறது. இந்த பாட்டிலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போல் ஒரு வடிவம் தெரியும். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அந்த வடிவம் நீக்கப்படவில்லை.இந்நிலையில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சென்னை ஹாய்கோர்ட்டில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் “தமிழக அரசு, ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் குடிநீரை ஒரு பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இது மிகவும் தவறானது. குடிநீரை பொது மக்களுக்கு இலவசமாகத்தான் அரசு விநியோகிக்க வேண்டும். மக்கள் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு குறைந்த மணி நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த நேரத்திலும் முழுமையாக குடிநீர் கிடைப்பதில்லை.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசே குடிநீரை விற்பது முறையற்றது. அம்மா குடிநீரை, போக்குவரத்து கழகங்கள் சாலையோரத்தில் பங்க் அமைத்து விற்பனை செய்கிறார்கள். குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் பொறித்துள்ளார்கள். இதுவும் தவறானது. வேண்டுமானால், முதல்வர் குடிநீர் என்று குறிப்பிடலாம். அம்மா என்ற பெயரில் போட்டது தவறானது. எனவே, அம்மா குடிநீர் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.”என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரே, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.