அடுத்தடுத்து கடந்த புயல்களால் தமிழகத்தில் பருவமழை குறைவு!
அடுத்தடுத்து தமிழகத்தைக் கடந்து போன பைலின், ஹெலன் மற்றும் லெஹர் புயல்களின் தாக்கத்தால் இங்கு பெய்ய வேண்டிய வடகிழக்கு மழையின் அளவு 30 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதே சமயம் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 2) முதல் மாநிலத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் அதிகமாகப் பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பருவ மழைக் காலம் தொங்கி கிட்டத்தட்ட 2 மாதங்களாகிóயும் சராசரி அளவை விட குறைவாகவே மழை பதிவாகியுள்ளதாம்.
குறிப்பாக கடலூர், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் சராசரியாக 80 செ.மீ மழை பதிவாக வேண்டும். ஆனால் தற்போது 40 செ.மீ அளவு மழை மட்டுமே பெய்துள்ளது. தமிழகத்துக்கு வரவேண்டிய மழை வாய்ப்பு, ஹெலன் மற்றும் லெஹர் புயல் காரணமாக ஆந்திரத்தில் பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை மையத்தின் துணை இயக்குநர் ஒய்.இ.ஏ.ராஜ் ”
தமிழகத்தில் ஆண்டுக்கு 92 செ.மீ மழை சராசரியாக பெய்ய வேண்டும். கடந்த 2005 லிருந்து 2011-ஆம் ஆண்டு வரை சராசரி அளவை விடக் கூடுதலாக மழை பெய்தது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக மழை அளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையின் அளவு 16 சதவீதம் குறைந்தது.
இந்த ஆண்டைப் பொருத்த வரை, 30 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது.காரணம்.கடந்த இரு மாதங்களுக்குள் வங்கக்கடலில் 4 புயல்கள் உருவாகியுள்ளன. பைலின், ஹையான், ஹெலன், லெஹர் ஆகிய 4 புயல்கள் அந்தமான் கடல்பகுதியில் உருவாகின.
இவற்றில் ஹெலன், லெஹர் புயல்கள் தமிழகத்தை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை ஆந்திரத்தை நோக்கி நகர்ந்தன. இந்த புயல்கள் காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி எடுத்துச் சென்றதால் தமிழகத்தில் மழை வாய்ப்பு போதிய அளவு இல்லை. இதனால்தான் பருவமழை அளவு குறைந்தது.
இருப்பினும் தற்போது மழை பெய்வதற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. எனவே டிசம்பர் 2 அல்லது 3 – ஆம் தேதி முதல் தமிழகத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார் அவர்.